/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bar-art_1.jpg)
காரில் மது அருந்த வருவோருக்கு ஓட்டுநர் இல்லையெனில் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை மதுபான பார் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநரை மதுபான பார் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட வேண்டும் என கோவை மாந்கர காவல்துறை சார்பில் அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகக் கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் ஒரு பொறுப்பற்ற செயலாகும். இதுகுறித்து ஏற்கனவே கோவை மாநகர காவல்துறையால் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும், பத்திரிக்கை செய்திகளும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலான கடந்த 3 தினங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில், 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/coimbatore-city-police-logo-art.jpg)
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுக்கும் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக அவர்களது மதுபானக் கூடங்களுக்குச் சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்பச் செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மதுபானக்கூட உரிமையாளர், நிர்வாகிகள் தங்களது மதுபானக் கூடத்திற்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் சொந்த டிரைவருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மது அருந்தியுள்ள ஒருவர் சொந்த டிரைவர் இல்லாத சூழ்நிலையில், அவர் பாதுகாப்பாக அவரது வீட்டிற்குச் செல்வதற்குத் தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும். அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவர் சம்பந்தப்பட்ட மதுபானக்கூடம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், மது அருந்த தங்களது மதுபானக் கூடங்களுக்கு வருபவர்கள் வேறு ஏதேனும் போதைப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும். மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல் துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதுபானக் கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்குவதைத் தினம்தோறும் கண்காணித்து, பராமரிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது இருப்பில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். காவல்துறையினர் கோரும்போது அது அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SIREN-ART_5.jpg)
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185இன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியமைக்காக முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்படுவோர் மீது ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது.
இதே தவற்றை இரண்டாவது முறையாகச் செய்வோர் மீது ரூ. 15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், இக்குற்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுபவரது வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக் கூடாது என்று காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)