Skip to main content

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

 New Attorney General of the Government of Tamil Nadu Shanmugasundaram!

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குறித்து பார்ப்போம்!

சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை சண்முகசுந்தரம் வகித்துள்ளார். இவர் 2002- 2008 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1996- 2001-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர். 2015- 2017ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் சண்முகசுந்தரம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், 1977- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர் சண்முகசுந்தரம். 1989- 1991 வரையிலான காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். அரசு சார்பிலும், சி.பி.ஐ. சார்பிலும், ரயில்வே சார்பிலும் பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996- மே 2001 வரை அரசு வழக்கறிஞராக பல நூறு குற்ற வழக்குகளிலும், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு வழக்குகளிலும் வாதாடியவர். மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடி உள்ளார். 

 

லண்டனில் முறைகேடாக ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாரங்களை லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரட்டியவர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2000- ஆம் ஆண்டு அரசின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற 59- ஆம் ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் சண்முகசுந்தரமும் ஒருவர். 2005- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுனெஸ்கோவுடன், தேசிய கல்வி அமைச்சகம் இணைந்து இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் 'கல்வி என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை மற்றும் அதற்கு நிதி அளிப்பதற்கான சட்டப் பணிகள்' என்ற தலைப்பில் பங்கேற்றார். 

 

1992- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் பிரிட்டனில் கிரிமினல் சட்ட மேம்பாடு குறித்து பயின்றவர். இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகளை அவதானித்தவர். இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பிரிவினரின் அழைப்பின் பேரில் உரை நிகழ்த்தியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்