Skip to main content

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

 New Attorney General of the Government of Tamil Nadu Shanmugasundaram!

 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குறித்து பார்ப்போம்!

சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை சண்முகசுந்தரம் வகித்துள்ளார். இவர் 2002- 2008 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1996- 2001-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் உடையவர். 2015- 2017ல் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் சண்முகசுந்தரம். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், 1977- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவ தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர் சண்முகசுந்தரம். 1989- 1991 வரையிலான காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் வழக்கறிஞராக இவர் நியமிக்கப்பட்டார். அரசு சார்பிலும், சி.பி.ஐ. சார்பிலும், ரயில்வே சார்பிலும் பல்வேறு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996- மே 2001 வரை அரசு வழக்கறிஞராக பல நூறு குற்ற வழக்குகளிலும், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு வழக்குகளிலும் வாதாடியவர். மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வாதாடி உள்ளார். 

 

லண்டனில் முறைகேடாக ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாரங்களை லண்டன், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரட்டியவர். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2000- ஆம் ஆண்டு அரசின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற 59- ஆம் ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் சண்முகசுந்தரமும் ஒருவர். 2005- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுனெஸ்கோவுடன், தேசிய கல்வி அமைச்சகம் இணைந்து இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் 'கல்வி என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை மற்றும் அதற்கு நிதி அளிப்பதற்கான சட்டப் பணிகள்' என்ற தலைப்பில் பங்கேற்றார். 

 

1992- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் பிரிட்டனில் கிரிமினல் சட்ட மேம்பாடு குறித்து பயின்றவர். இங்கிலாந்து நீதிமன்றங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளில் குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகளை அவதானித்தவர். இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பிரிவினரின் அழைப்பின் பேரில் உரை நிகழ்த்தியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.