தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், தீவிரமாக போதைப்பொருள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் குட்கா, கஞ்சா பொருட்கள் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல.
காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு கஞ்சா புழக்கத்தில் விடப்படுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். காவல்துறையினரின் நடவடிக்கை காரணமாக இது 90 மடங்காகவோ, 95 மடங்காகவோ குறைந்திருக்கலாம். ஆனால், தடைப்படவில்லை. போதைப் பொருட்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிந்த பிறகும், இலங்கைக்கு கடத்துவதற்காக 750 கிலோ கொண்டுவரப்படுகிறது என்பதிலிருந்தே கஞ்சா வலைப்பின்னல் எவ்வளவு வலிமையாக செயல்பட்டு வருகிறது என்பதை அறியலாம்.
புழக்கத்தில் விடப்படும் கஞ்சாவை பிடிப்பது பத்திரிகை செய்திகளுக்கு மட்டும் தான் பயன்படும். கஞ்சா வலைப்பின்னலைக் கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பது தான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.