Skip to main content

அருவிகளில் வெள்ளப்பெருக்கு?; பொதுமக்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
Nellie District Collector warns the public for Flooding in waterfalls

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எனவே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே சமயம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தேனி 5 ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்காசி பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின்(17) அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் ஆகிய இடங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மேற்குத்தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், நீர்நிலைகள், காட்டாறுகளில் மழையால் தற்காலிக அருவிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த ஒரு நீர்நிலைக்குள்ளும் மக்கள் இறங்க வேண்டாம். தாமிரபரணி, கடனா, சிற்றாறு, நம்பியாறு, அனுமன் நதி உள்ளிட்டவற்றில் இறங்கக் கூடாது. 

கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். உதவி தேவைப்படுவோர் மாவட்ட பேரிடல் மேலாண்மை உதவி மையத்தை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக உதவி மையத்தை 101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மழை நேரங்களில் மின்கம்பங்கள் அருகிலோ அல்லது வெட்டவெளியிலோ பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும். பழுதான கட்டிடங்கள், சிலாப்புகள் அருகில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இன்றளவும் ஜாதிய தீண்டாமை சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது” - இ.பி.எஸ்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
E.P.S says Even today incidents of caste-related untouchability are painful

நெல்லை மாநகர் பகுதியில் உள்ள ரெட்டியார்பட்டியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாளையங்கோட்டைப் பகுதியில் வசிக்கும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வேண்டி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (13-06-24) அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், காதலர்கள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தனர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, பெண்ணைப் பல இடங்களில் தேடிவந்த பெண் வீட்டார் பெண் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருப்பது தெரிந்து அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இரண்டு கார்களில் வந்த 30க்கும் மேற்பட்டோர் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும் பெண்ணை அனுப்ப அங்குள்ள நிர்வாகிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கதவுகளை உடைத்து அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்கள், இருக்கை உள்ளிட்டவையை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல்ராஜா, 5 பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

E.P.S says Even today incidents of caste-related untouchability are painful

இதனிடையே, கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்தத் திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை கோரி மனு’  - விசாரணை ஒத்திவைப்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

கரூர் மாவட்டம் நெரூர் என்ற கிராமத்தில் ஒரு சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு மே 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இது மதம் சார்ந்த விவகாரம். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை. மேலும் இதற்கு எந்த அனுமதியும் கேட்க வேண்டியது இல்லை.  பொதுவாக விழாக்களில் அனுமதி கேட்பது என்பது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு பொருத்தப்படக் கூடிய ஒலிபெருக்கி வெளியில் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். எனவே இந்த விழாவை நடத்திக் கொள்ளலாம்” என உத்தரவிட்டிருந்தார். 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing

அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பின்பற்றி இந்த விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடத்தப்பட்ட பின்பு சர்ச்சையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு நாங்கள் எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. மேலும் இது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு ஒன்றும் உள்ளது. இந்த உத்தரவுகளை எல்லாம் மறைத்து மனுதாரர் தனக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition seeking ban on Justice Swaminathan order Adjournment of hearing
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு சார்பிலும் இந்த வழக்கில் விரிவான விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் வழக்கு விசாரணைக்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 25 ஆம் தேதி (25.06.2024) மதியம் 02.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அப்போது இரு தரப்பு வாதங்களையும் விரிவாக நடத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.