Skip to main content

நெல்லை கொடூரம்; பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழிப்பு சித்ரவதை

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

அக்.30 அன்று இரவு ஏழு மணிக்கு நெல்லை தச்சநல்லூரை ஒட்டியுள்ள மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்களான மனோஜ் அவரது நண்பர் மாரியப்பன் இருவரும் இயற்கை உபாதையைக் கழித்துவிட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வருவதற்காகச் சென்றிருக்கிறார்கள்.

 

நெல்லையின் ஸ்ரீபுரத்திலுள்ள தனியார் கேபிள் டி.வி. ஒன்றில் பணிபுரிகிற மனோஜ் மணிமூர்த்தீஸ்வரத்திலுள்ள தன் மாமா வீட்டில் தங்கியபடி கேபிள் வேலைக்குப் போய் வந்திருக்கிறார். பைக்கில் சென்ற இருவரும் ஆற்றுப் படுகை பக்கமுள்ள சுடலை கோயிலில் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழித்துவிட்டு இருவரும் பைக் பக்கம் வரும்போது அந்தப் பக்கமாய் மது அருந்திக் கொண்டிருந்த நான்கு வாலிபர்கள் இவர்களைப் பார்த்ததும், கடுப்பானார்கள். ''என்னலேய்... நாங்க சரக்கடிக்கிறப்ப தைரியமா இந்தப் பக்கம் வாறீக'' என்று அதட்டலாய் பேசியவர்கள், அவர்களிடம் நீங்க என்ன ஜாதி என்று கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் பட்டியலின சமூகம் சார்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் நான்கு பேரும் இரண்டு பேரைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள்.

 

வலி பொறுக்கமாட்டாதவர்கள் கதறிய போது மிரட்டியவர்கள் அவர்களை தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மனோஜின் சட்டைப் பையைத் துளாவியவன், 'என்னலேய் பணமில்லாம வந்துருக்கீக' என வெறியானவர்கள் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து மனோஜையும் மாரியப்பனையும் முதுகு, நெற்றிப்பொட்டு, உடம்பு முழுக்க தாக்கியதில் அவர்கள் இருவரின் உடல் முழுக்கக் காயங்கள். இதில் மாரியப்பனின் இடது தோள்பட்டையில் கடுமையான அடி விழுந்திருக்கிறது. மனோஜை கம்பால் தாக்கியதில் அவரின் வலது கண்ணில் காயம். உடல் முழுக்க இருவருக்கும் வீக்கம்.

 

அதன்பிறகு அந்த போதைக் கும்பல், மனோஜையும் மாரியப்பனையும் நிர்வாணப்படுத்தி சற்றும் கூட ஈவு இரக்கம் காட்டாமல் போதை வெறியில் இருவரின் முகத்தின் மீதும் சிறுநீர் கழித்து பஞ்சமாபாதகத்தை நடத்தியவர்கள், அவர்களின் செல்போனைப் பிடுங்கி உடனடியாக 'அஞ்சாயிரம் பணம் குடுங்கல' என்றதுடன் மனோஜின் கனரா வங்கி ஏ.டி.எம். கார்டையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

 

இந்த நேரத்தில் போதைக் கும்பல் நான்கு பேரின் நண்பர்கள் இரண்டு பேர் பைக்கில் அங்கு வர, அவர்களும் தங்கள் பங்கிற்கு அப்பாவிகளான மனோஜையும், மாரியப்பனையும் தாக்கியிருக்கிறார்கள். ''பணம் கொடுக்கலைன்னா ரெண்டு பேரும் உசுரோட இந்த எடத்தவிட்டுப் போவமுடியாதுலேய். எவனயாவது ஜி-பே'ல பணம் போடச் சொல்லுல' என அடியும் மிரட்டலுமாய் கத்தியிருக்கிறார்கள். இதனால் பயந்து போன மாரியப்பன் செல்லில் தன் ஓனர் ராஜாவைத் தொடர்பு கொண்டு அழுதவர் நடந்தவற்றைச் சொல்லி ஐந்தாயிரம் பணம் மனோஜின் அக்கவுண்ட்டில் போடச் சொல்ல, அவரும் போட்டிருக்கிறார்.

 

கடைசியாய் அந்த கும்பலின் 2 பேர் பைக்கில் சென்று அவர்களின் ஏ.டி.எம். கார்டைக் கொண்டு பணம் எடுத்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் சித்ரவதை நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது. போனவர்கள் பணத்துடன் வந்த பிறகு, ஒடுங்கிக் கொண்டிருந்த மனோஜிடமும், மாரியப்பனிடமும், 'நடந்தத வெளிய சொன்னீக கத்தியால குத்தி குடல வவுந்துறோம்ல' என மிரட்டியிருக்கிறார்கள்.

 

இதற்கிடையே சமயம் பார்த்து கும்பலிடமிருந்து நிர்வாண நிலையில் தப்பித்த மனோஜும் மாரியப்பனும் அரை நிர்வாணத்தில் ஊருக்கு வந்து உறவினர்களிடம் சொல்லி அழ, அரண்டு பதறிய ஊர்மக்கள் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார்கள். விடிந்ததும் விஷயம் வெடிகுண்டாய் வெடித்து நகரில் பிரளயத்தைக் கிளப்பியிருக்கிறது. அரக்கப் பறக்க அரசு மருத்துவமனை வந்த தச்சநல்லூர் போலீசார் சிகிச்சையில் இருந்தவர்களிடம் விசாரித்து புகாரைப் பெற்றவர்கள், வெறி கொண்ட கும்பலின் மீது வன்கொடுமை, வழிப்பறி, ஆயுதங்களால் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியவர்கள், ஆறு பேரைத் தங்களின் கஷ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

நாங்க உடல் உபாதையப் போக்கிட்டு குளிக்கப் போவ எங்க பைக் பக்கம் வந்த உடனேயே அந்தக் கும்பல் எங்கள சுத்திட்டாக. ஜாதியக் கேட்டுத் தெரிஞ்சதும் ரெண்டு பேர் கைகளையும் முறுக்கிக்கிட்டு எங்கள திமிறவுடாம கம்பால அடிச்சி கத்தியால கீறுனாக. கஞ்சாவோட மதுவையும் சேத்து அடிச்சிருக்காங்க. போதை, வெறி ஆறு பேர்ட்ட இருந்து எங்களால தப்பிக்க முடியாத நெலம. உடம்பெல்லாம் வீக்கம்' என வேதனைப்பட்டனர். சிகிச்சையிலிருந்த மனோஜும், மாரியப்பனும்.

 

நிகழ்வையறிந்து பதறிப்போன நெல்லை மாவட்ட சி.பி.எம்.மின் மாவட்ட செ.வான ஸ்ரீராம், மருத்துவமனை சென்று அவர்களின் நிலையைக் கண்டு அதிர்ந்தவர் நம்மிடம். ''ரெண்டு பேரும் வேலை முடிஞ்சி ஆத்துல குளிப்பதற்காகச் சென்றவர்களை ஜாதியைக் கேட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்தவங்கன்'னு சொன்னதும், சாதிவெறியில் அடிச்சி நிர்வாணப்படுத்தி தாக்கியதுமில்லாம, அவங்க முகத்தில் சிறுநீர் கழிச்சவங்க, கண்ணத் தொறங்கடான்னு சொல்லியும் சிறுநீர் கழிச்சி கொடூரப்படுத்திருக்காங்க. அவங்க கண்ணு ரெண்டும் வீங்கி இருக்கு. இது ஒரு மோசமான சம்பவம். மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாதது. தமிழ் சமூகத்திற்கே வெட்கக் கேடானது. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும்'' என்றார் அழுத்தமான குரலில்.

 

இதனிடையே பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரத் தக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்து நெல்லை ரயில்வே நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மனித சமூகத்தின் விஷ ஒட்டுண்ணியான போதையும் வன்மமும் வேரறுக்கப்பட வேண்டிய வைரஸ்கள்.

 

இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் இருக்கிறது நெல்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.