மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு துணை நிற்கிற மாநில அ.தி.மு.க. எடப்பாடி அரசும் கருத்துரிமையை தொடர்ந்து நசுக்கி வருகிறது என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இரா.காமராசு இன்று நக்கீரன் இணையத்திடம் பிரத்தியேகமாக தெரிவித்தார்.

Advertisment

Nellai Kannan arrested issue

இது குறித்து அவர் கூறுகையில், "கவிஞர் வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியல் காழ்ப்பூணர்ச்சியினால் தமிழ் கவிதை உலகில் தனக்கென தனியிடம் பெற்றுள்ள கவி ஆளுமையை இழிவுபடுத்தும் தீய சக்திகளுக்கு தமிழ்கூறும் நல்லுலலகம் அடிபணியக்கூடாது என்பதையும் பெருமன்றம் வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் கருத்துரிமைக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை கலை இலக்கியப்பெருமன்றம் மிகக் கவலையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறது. குறிப்பாக, மேடைப் பேச்சில் தெரிவித்த கருத்துகளுக்காக தமிழ்கடல் என பாராட்டப்படும் தமிழறிஞர் நெல்லை கண்ணன் மீது சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யயப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையை மதித்து நெல்லை கண்ணன் மீது போடப்பட்டுள்ள மேற்கண்ட வழக்கை ரத்து செய்திட தமிழ்நாடு அரசினை பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது" என்றார்.