Skip to main content

தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஆலை செயல்படாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 
 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறையில் புதுஅப்பநேரி பகுதியைச் சேர்ந்த அட்சயராமானுஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. ஏ.வி.எம். என்ற பெயரில் செயல்படும் இந்த ஆலையில் 31 அறைகள் உள்ளது. அனைத்து வகை பட்டாசுகளும் தயாரிக்கும் வகையில் நாக்பூரில் பெற்ற உரிமம் உள்ளது. 

nellai district sankarankoil crackers plant incident police investigation

 

இந்த பட்டாசு ஆலையில் கடந்த தீபாவளிப்பண்டிகை வரையில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நடந்து வந்தது. இதில் 50- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தீபாவளிக்கு பின் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தற்போது வரை ஆலை செயல்படவில்லை. 
 

இந்நிலையில் தீபாவளிக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசில் விற்பனையாகாமல் தேங்கிய பேன்ஸி ரக பட்டாசுகளை 4- வது அறையில் பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று (05.01.2020) காலை எதிர்பாராத விதமாக அந்த அறையில் இருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த அறை தரைமட்டமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மற்ற அறைகள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். 

பட்டாசு ஆலை செயல்படாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.