Skip to main content

கொலையில் முடிந்த கைதிகள் மோதல்! - பாளையங்கோட்டை சிறைத்துறை அலட்சியம்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

NELLAI DISTRICT palayamkottai PRISON INCIDENT

 

நெல்லை மாவட்டம், களக்காடு காவல் நிலைய வழக்கு தொடர்பாக முத்து மனோ என்பவர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறையில் குறிப்பிட்ட பிரிவினரால் அவர் தாக்கப்பட்டார். ஐ கிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

 

சிறைத்துறை வட்டாரத்தில் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது “முத்து மனோ தாக்கப்பட்டபோது பகல் மணி 03.45. அந்த நேரத்தில் சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி. ஆகியோர் சிறை வளாகத்தில் இருந்தனர். ஆனாலும், கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில், சிறைகளில் இதுபோன்ற கொலைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

 

மத்திய சிறை ஒன்றில், பிசிபி கேன்டீன் நடத்த ஒரு மாத எக்ஸ்டென்ஷனுக்கு ரூபாய் 5 லட்சம் கமிஷன் வாங்கும் மேலதிகாரி இருக்கிறார். அதனால்தான், சிறையில் 25 ரூபாய் பீடி கட்டுக்கு ரூபாய் 100 விலை வைக்கிறார்கள். இந்த பி.சி.பி. வருமானம், பெட்ரோல் பங்க் வருமானம், கைதிகளுக்கு உணவுப்பொருள் வழங்குவதன் மூலம் கிடைக்கும் மோசடி வருமானம், ஆடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பில் கிடைக்கும் லாபம், கிளைச்சிறைகளில் வசூலிக்கப்படும் மாமூல், சிறை உற்பத்தி பொருட்களில் கொள்ளை, பணியாளர்களுக்கு மெமோ கொடுத்து அதனை கன்சிடர் செய்வதற்காகப் பெறப்படும் லஞ்சம் என அனைத்திலும் பணமே குறிக்கோள் என்று செயல்படும் அதிகாரிகள், கைதிகள் நலனைக் கருத்தில் கொள்ளாததாலேயே, சிறை வளாகத்தில் கொலைகள் நடக்கின்றன. அதே நேரத்தில், அதிகாரிகள் தப்புவதற்கு கடைநிலை ஊழியர்கள் பலியாக்கப்படுகின்றனர்.

 

பாளை. சிறையிலும்கூட, கைதி முத்து மனோவை ஒரு பிரிவினர் ஒன்றுசேர்ந்து அடித்தபோது, காவலர் ஒருவர் தடுத்திருக்கிறார். அப்போது, இன்னொரு பிரிவினர் ‘அவன் சாகட்டும்’ என்று அந்தக் காவலரைப் பிடித்து இழுத்து, கடமையைச் செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அடித்த அடியில், சிறையிலேயே முத்து மனோ செத்துவிட்டார். ஆனாலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது இறந்தார் என்று ‘ரெக்கார்ட்’ செய்துள்ளனர்.

 

சென்னை புழல் சிறையில், கைதிகளான ‘பாக்ஸர்’ முரளி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகள், இப்படித்தான் சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இங்கே பாளை. சிறையில் முத்து மனோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறைகளில் கைதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். முறையான விசாரணையும் நடத்தப்பட வேண்டும்.” என்றனர் குமுறலாக. 

 

குற்றவாளிகளை சிறையில் அடைப்பதன் நோக்கமே, தண்டனை காலத்தில் தங்களின் தவறுகளை உணர்ந்து, மனம் திருந்தி, விடுதலையான பிறகு மறுவாழ்வு வாழத்தான்! சிறைகளிலோ, அடிதடியும் கொலைகளும் அல்லவா நடக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.