Skip to main content

"சொந்த ஊருக்கு அனுப்பு..." வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்... போலீசார் மீது தாக்குதல்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


"எங்களுக்கும் வயிறு இருக்கு! குடும்பமும் இருக்கு! நீங்கள் கூறியதை நிறைவேற்றவில்லை! நாங்கள் எங்கள் ஊருக்குக் கிளம்புறோம்! எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்க!" என்கின்ற கோரிக்கையுடன் தலை வாசலை நோக்கி முன்னேறிய நிலையில், தங்களைத் தடுத்த போலீசார் மீது தாக்குதலைத் தொடங்கி போராடி வருகின்றனர் கூடங்குளத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளிகள்.

 

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டின் ஒத்துழைப்புடன் இணைந்து 1,000 மெகாவாட் மின்சாரத்தை அணு உலை மூலமாக தயாரித்து வருகின்ற கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம், இந்தப் பகுதியினை அணு உலை பூங்காவாக மாற்ற இருப்பதால் மூன்று மற்றும் நான்காம் பகுதியில் கட்டடப் பகுதிகளை கட்ட லார்சென் & டூப்ரோ (L & T) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இக்கட்டிடப் பணிக்காக பஞ்சாப், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெளிமாநிலக் கூலித் தொழிலாளர்களை வரவழைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது லார்சென் & டூப்ரோ நிறுவனம். பணி நிமித்தமாக வந்த மொத்தமுள்ள 3,350 வெளி மாநில ஒப்பந்தக் கூலித் தொழிலாளிகளும் வெளியே செல்லாதாவாறு உணவு, உறைவிடத் தேவைக்காக மூன்று மற்றும் நான்காம் வாசலுக்கு அருகில் கூடாரம் போட்டு அங்கேயே தங்க வைத்துள்ளது.
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


இது இப்படியிருக்க, கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வேலையில்லாத சூழல் கூலித்தொழிலாளிக்கு ஏற்பட, தாங்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கூலித்தொழிலாளர்களை அனுப்பி வைத்தால் அடுத்து பணி ஆரம்பிக்கும் போது பாதிப்பு இருக்குமென கணக்குப் போட்ட கார்ப்பரேட் நிர்வாகம் அவர்களை அனுப்பி வைக்க மறுத்து உணவுத்தேவைக்கும், வேலை இல்லா நாட்களுக்கான சம்பளமும் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி கூலித் தொழிலாளிகளை தக்க வைத்தது. எனினும், வாக்குறுதிப்படி எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம்.


தங்களது ஒப்பந்த நிறுவனம் கைவிட்டதால் மீண்டும் "சொந்த ஊருக்கு அனுப்பு". எனும் கோஷத்தை கையிலெடுத்து கடந்த 4- ஆம் தேதி நான்காம் பகுதி வாசலில் போராட்டத்தினை துவக்கினர் 3,350 வட மாநில கூலித்தொழிலாளிகள். அன்றைய தினம் அப்பகுதிக்கு வந்த ராதாபுரம் தாசில்தார் செல்வன், கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் தொழிலாளர்களுக்காக L&T நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையை துவங்க அவர்களும், "அடிப்படை வசதிகள், உணவுத்தேவைகளை நிறைவேற்றுவது, வேலையிழந்த நாட்களின் சம்பளத்தை உடனடியாக வழங்குவது." என்கின்ற அதே வாக்குறுதிகளை மீண்டும் கொடுக்க அப்போதைக்குப் போராட்டம் சுமூக நிலைக்கு வந்தது. 
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


எனினும், தற்பொழுது வரை அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம் என்பதால், கோபமடைந்த தொழிலாளிகள் இன்று (09/05/2020) காலை 09.30 மணியளவில் மூன்றாம் பகுதி வாசலை உடைத்துக் கொண்டு தலை வாசலை நோக்கி கூடங்குளத்தை விட்டு வெளியேற முன்னேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா அவர்களுடன் பேச்சு வார்த்தையைத் துவக்க, கட்டுக்கடங்காத கூட்டம் அவரை நெட்டித் தள்ளி, தாக்குதலை தொடங்கி முன்னேறியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகதாவும், காவலர் சக்தியும் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி பெற்ற நிலையில், காவலர் சக்திக்கு மட்டும் தலையில் தையல் இடப்பட்டது.


இதனால் இப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக்கொள்ள, மாவட்ட எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். எனினும், "சொந்த ஊருக்கு அனுப்பு" எனும் கோஷத்தை விடவில்லை  வெளிமாநிலக் கூலித்தொழிலாளிகள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.