Skip to main content

"சொந்த ஊருக்கு அனுப்பு..." வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்... போலீசார் மீது தாக்குதல்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


"எங்களுக்கும் வயிறு இருக்கு! குடும்பமும் இருக்கு! நீங்கள் கூறியதை நிறைவேற்றவில்லை! நாங்கள் எங்கள் ஊருக்குக் கிளம்புறோம்! எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்க!" என்கின்ற கோரிக்கையுடன் தலை வாசலை நோக்கி முன்னேறிய நிலையில், தங்களைத் தடுத்த போலீசார் மீது தாக்குதலைத் தொடங்கி போராடி வருகின்றனர் கூடங்குளத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளிகள்.

 

 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டின் ஒத்துழைப்புடன் இணைந்து 1,000 மெகாவாட் மின்சாரத்தை அணு உலை மூலமாக தயாரித்து வருகின்ற கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம், இந்தப் பகுதியினை அணு உலை பூங்காவாக மாற்ற இருப்பதால் மூன்று மற்றும் நான்காம் பகுதியில் கட்டடப் பகுதிகளை கட்ட லார்சென் & டூப்ரோ (L & T) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளது. இக்கட்டிடப் பணிக்காக பஞ்சாப், ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெளிமாநிலக் கூலித் தொழிலாளர்களை வரவழைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது லார்சென் & டூப்ரோ நிறுவனம். பணி நிமித்தமாக வந்த மொத்தமுள்ள 3,350 வெளி மாநில ஒப்பந்தக் கூலித் தொழிலாளிகளும் வெளியே செல்லாதாவாறு உணவு, உறைவிடத் தேவைக்காக மூன்று மற்றும் நான்காம் வாசலுக்கு அருகில் கூடாரம் போட்டு அங்கேயே தங்க வைத்துள்ளது.
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


இது இப்படியிருக்க, கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வேலையில்லாத சூழல் கூலித்தொழிலாளிக்கு ஏற்பட, தாங்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென கோரிக்கை வைத்தனர். கூலித்தொழிலாளர்களை அனுப்பி வைத்தால் அடுத்து பணி ஆரம்பிக்கும் போது பாதிப்பு இருக்குமென கணக்குப் போட்ட கார்ப்பரேட் நிர்வாகம் அவர்களை அனுப்பி வைக்க மறுத்து உணவுத்தேவைக்கும், வேலை இல்லா நாட்களுக்கான சம்பளமும் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி கூலித் தொழிலாளிகளை தக்க வைத்தது. எனினும், வாக்குறுதிப்படி எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம்.


தங்களது ஒப்பந்த நிறுவனம் கைவிட்டதால் மீண்டும் "சொந்த ஊருக்கு அனுப்பு". எனும் கோஷத்தை கையிலெடுத்து கடந்த 4- ஆம் தேதி நான்காம் பகுதி வாசலில் போராட்டத்தினை துவக்கினர் 3,350 வட மாநில கூலித்தொழிலாளிகள். அன்றைய தினம் அப்பகுதிக்கு வந்த ராதாபுரம் தாசில்தார் செல்வன், கூடங்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் தொழிலாளர்களுக்காக L&T நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையை துவங்க அவர்களும், "அடிப்படை வசதிகள், உணவுத்தேவைகளை நிறைவேற்றுவது, வேலையிழந்த நாட்களின் சம்பளத்தை உடனடியாக வழங்குவது." என்கின்ற அதே வாக்குறுதிகளை மீண்டும் கொடுக்க அப்போதைக்குப் போராட்டம் சுமூக நிலைக்கு வந்தது. 
 

NELLAI DISTRICT KOODANKULAM PLANT MIGRANT LABOURS


எனினும், தற்பொழுது வரை அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை L&T நிறுவனம் என்பதால், கோபமடைந்த தொழிலாளிகள் இன்று (09/05/2020) காலை 09.30 மணியளவில் மூன்றாம் பகுதி வாசலை உடைத்துக் கொண்டு தலை வாசலை நோக்கி கூடங்குளத்தை விட்டு வெளியேற முன்னேறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா அவர்களுடன் பேச்சு வார்த்தையைத் துவக்க, கட்டுக்கடங்காத கூட்டம் அவரை நெட்டித் தள்ளி, தாக்குதலை தொடங்கி முன்னேறியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகதாவும், காவலர் சக்தியும் காயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் உதவி பெற்ற நிலையில், காவலர் சக்திக்கு மட்டும் தலையில் தையல் இடப்பட்டது.


இதனால் இப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக்கொள்ள, மாவட்ட எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். எனினும், "சொந்த ஊருக்கு அனுப்பு" எனும் கோஷத்தை விடவில்லை  வெளிமாநிலக் கூலித்தொழிலாளிகள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.