Skip to main content

நெல்லை பயங்கரம்.. கட்டிட கான்ட்ராக்டர் வெட்டிப் படுகொலை... பழிக்குப் பழியா?

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Nellai District Kannan passes away police investigating

 

நெல்லை அருகேயுள்ள தாழையூத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்துவந்த கண்ணன், நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் தனது லோடு வேனில் வீட்டிற்குத் தேவையான குடிதண்ணீரைப் பிடிப்பதற்காக 10 ப்ளாஸ்டிக் குடங்களுடன் தாழையூத்து நான்கு வழிச் சாலையிலிருக்கும் பண்டார குளத்திற்குச் சென்றிருக்கிறார்.

 

அவரை வேவு பார்த்த ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்திருக்கிறது. அங்குள்ள பொதுக்குழாயில் கண்ணன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. பதறிப்போன அவர், உயிர் தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் சாலையில் வழிமறித்து சரமாரியாக கண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது அந்த கும்பல். ரத்த வெள்ளத்தில் மிதந்து துடித்த கண்ணனை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்ற போது வழியிலேயே கண்ணனின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் போது அங்கு நின்றிருந்தவர்கள் பதறி, சிதறி ஓடியிருக்கிறார்கள்.

 

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த நெல்லை டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ், எஸ்.பி.மணிவண்ணன், தாழையூத்து டி.எஸ்.பி. அர்ச்சனா உள்ளிட்ட போலீஸார் ஸ்பாட்டில் விசாரணையை நடத்தியிருக்கின்றனர். இது குறித்து நாம் பரவலாக விசாரித்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் பணகுடி பள்ளி ஒன்றில் மாணவனும் மாணவி ஒருவரும் காதலித்த விவகாரத்தில், மாணவிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அந்த மாணவியின் வாழ்க்கையில் மாணவன் குறுக்கிடாமல் இருப்பதற்காக அவரை சிங்கிகுளத்திற்கு வரவழைத்து அடித்து மிரட்டிய வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சேர்ந்த முத்துமனோ, அருள்துரைசிங், மாதவன், சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய களக்காடு போலீஸார் கடந்த ஏப்ரல் 22 அன்று பாளை மத்தியச் சிறையில் அடைத்தனர். அது சமயம் சிறையிலிருந்த அவர்களின் எதிர் பிரிவைச் சேர்ந்த விசாரணைக் கைதிகளால் இவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து தாக்கியதில் முத்துமனோ சிறையிலேயே பலியானார். இந்தச் சிறைப் படுகொலையில் தொடர்புடையவர்களில் ஜேக்கப் மற்றும் கொக்கி குமார் குறிப்பிடத்தக்கவர்கள். இது தொடர்பாகச் சிறைக்காவலர்கள் சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள்.

 

பலியான முத்துமனோ தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் மாவட்ட மாணவரணிச் செயலாளரானவர். உரிய நிவாரணம் வேண்டும், சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டுமென்று போராடிய முத்துமனோவின் உறவினர்கள் அரசால் அறிவிக்கப்பட்ட உதவித் தொகையையடுத்து 72 நாள் போராட்டத்திற்குப் பிறகே முத்துமனோவின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

 

முத்துமனோ கொலைக்குக் காரணமான ஜேக்கப்பின் உற்ற நண்பர் தான் தற்போது கொலை செய்யப்பட்ட கண்ணன். முத்துமனோவின் கொலைக்குப் பழிக்குப்பழியாக அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப்பின் நண்பரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்ற சந்தேக கோணத்தில் போலீஸாரின் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. இதனிடையே தாழையூத்தின் சர்வீஸ் சாலையில் படுகொலையைக் கண்டித்தும், கண்ணன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கண்ணனின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாழையூத்துப் போலீஸார் ஒரு வழக்கின் காரணமாக ஜேக்கப்பைத் தேடியிருக்கிறார்கள். அது சமயம் தன் நண்பனான ஜேக்கப்பிற்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார் கண்ணன். இதையறிந்த போலீஸார் கண்ணன் வீட்டில் மறைந்திருந்த ஜேக்கப்பைக் கைது செய்து பாளை மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அதன் பிறகே ஜெயிலில் முத்துமனோவின் படுகொலைச் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. ஜேக்கப், கண்ணன் இவர்களின் நெருங்கிய தொடர்பையறிந்து முத்துமனோவின் கொலைக்குப் பழியாக தற்போது கண்ணனைக் குறிவைத்துப் படுகொலைச் செய்திருக்கலாம் என்று சந்தேகமுள்ளது. தவிர இந்தச் சம்பவத்தில் தற்போது முத்துமனோவிற்கு ஆதரவாகப் புதிய கேங்க் ஒன்று உருவாகியிருக்கலாம் என்றும் தெரிகிறது. மேலும் ஜேக்கப், ராக்கெட் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியானவர் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

 

இது குறித்து நாம் நெல்லை மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணனைத் தொடர்பு கொண்டதில், இந்தச் சம்பவத்தில் அந்த டீம் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணைப் போகிறது மேலும் இதில் தொடர்புடையவர்கள் புதிய நபர்களாகத் தெரிகிறது. எப்படியும் விரைவில் கொலைக்குக் காரணமானவர்களை வளைத்துவிடுவோம் என்கிறார் அழுத்தமாக. அண்மைக்காலமாக அடங்கியிருந்த பழிக்குப் பழி கொலைச் சம்பவம் தற்போது மீண்டும் தலைதூக்கி இருப்பது நெல்லை மாவட்டத்தைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.