nellai district dam sand truck police

Advertisment

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள வண்டல் ஓடல் அணையிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிருபர் உள்பட 7 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மாவட்டத்தின் வீரவநல்லூரையடுத்த மலையான்குளம் கிராமத்தின் மலையடிவாரத்தில் உள்ளது வண்டல் ஓடை அணை. இங்கே தரமுள்ள ஆற்று மணலிருக்கிறது. அந்த மணல் முறைகேடாக அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வீரவநல்லூர் எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அத்துடன் வி.ஏ.ஓ. பாலமுருகன் ஆகியோர் வண்டல் ஓடை சென்று ஆய்வு செய்தனர்.

இதில் மர்ம நபர்கள் சிலர் அணையின் உட்புறமுள்ள வண்டல் மண்ணை டிராக்டர் மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மணல் லோடுடன் டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விசாரித்தனர்.

Advertisment

nellai district dam sand truck police

இதில் பொட்டலைச் சேர்ந்த ஜான் பீட்டர், அதே பகுதி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பால்ராஜ், சங்கரநாராயணன், சமுத்திரபாண்டி, ஆத்தியப்பன், வள்ளிநாயகம், வரதன் போன்றவர்கள் எனத் தெரியவந்ததுடன், இது போல் அவர்கள், தொடர்ந்து அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரியவந்திருக்கிறது. இதன்பின் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், மணல் கடத்திய ஏழு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜார் படுத்தி சிறையிலடைத்தனர்.

கைதானவர்களில் ஒருவரான ஜான் பீட்டர் தனியார் தொலைக்காட்சியின் அம்பை பகுதி நிருபராகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.