Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு பாடமானார் நெல் ஜெயராமன்

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

நாம் வாழ்ந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக வேண்டும் என்ற வார்த்தைகளுக்கிணங்க இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிவிட்டார். 

 

jayaraman


    
திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அதன் பிறகு வறுமை அவரை படிக்கவிடவில்லை. வயல் வேலையில் ஆர்வம் காட்டினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீது பற்றுக் கொண்டார். அதன் விளைவு இயற்கை விவசாயம் அவரை ஈர்த்தது. அதைப் பார்த்த நம்மாழ்வார் அழிந்துவரும் நம் பாரம்பரிய நெல் விதைகளை மீட்க வேண்டும் என்று சொல்ல. அதன் பிறகு அந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 

    
பன்னாட்டு நிறுவனங்களால் அழிந்துவிட்ட நமது 174 நெல் ரகங்களை மீட்டெடுத்து அதை நெல் திருவிழா என்று நடத்தி விவசாயிகளுக்கு கொடுத்து விதைகளை உற்பத்தியை அதிகரித்தார். அதன் விளைவு தமிழகத்தில் இன்று இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பல விருதுகளை வாங்கினார்.

நம் பாராம்பரிய நெல் ரகங்களில் ரசாயன கலப்பு இல்லை என்பதால் நோய்களும் வராது என்றார். ஆனால் நோயை தடுக்க மனிதன் நலமுடன் வாழ இத்தனை ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனுக்கு புற்றுநோய் வந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அவரை சென்னை அப்போலோவில் சேர்த்து செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றக் கொண்டார். 
 

ஒவ்வொரு நாளும் நெல் ஜெயராமன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை காப்பாற்ற பலரும் துடித்தனர். அரசியல் கட்சியினர் நேரில் சென்று பார்த்தார்கள். தமிழக அரசு சார்பில் அவருக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நக்கீரன் இணையத்தில் வெளியான செய்தி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் போன்றவர்களை அனுப்பி வைத்தது. பிறகு முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் போய் பார்த்து நலம் விசாரித்தார்கள். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. டிசம்பர் 6 மறைந்தார். 

 

jayaraman


அவரது மறைவுக்கு பிறகு அவரது வாழ்க்கையை அவர் மீட்ட நெல் ரகங்களை மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர்பச்சன் மற்றும் பலரும் கோரிக்கையை முன் வைத்தனர். பி.ஆர்.பாண்டியன் அஞ்சலிக் கூட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை எழுப்பினார்.

இந்த நிலையில் தான் தற்போது 12-ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. இதைப் பார்த்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள் நன்றி கூறியுள்ளனர். 
 

நாம் வாழ்ந்த வாழ்க்கை பாடமாக வேண்டும் என்பது இது தான் என்று சொல்லும் நெல் ஜெயராமனின் வழி செல்வோர்.. அவரால் மீட்கப்பட்ட நெல் ரகங்களை காப்பாற்றுவதுடன் அவர் நடத்தியது போல ஜூன் 8, 9 தேதிகளில் பாரம்பரிய நெல் திருவிழாவும் நடத்தப்படும் என்றனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது சகோதரர் மகன் ராஜீவ் மற்றும் நெல் திருவிழா விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிசம்பர் 6 பாரம்பரிய நெல் தினம்...174 பாரம்பரிய நெல் ரகம் மீட்ட நெல் ஜெயராமனின் நினைவு தினம்!

Published on 05/12/2019 | Edited on 06/12/2019


இயற்கையின் மீது காதல் கொண்ட நம்மாழ்வார் காவிரியில் இறங்கி நடந்த போது அவருடன் நடந்த இளைஞர் இரா.ஜெயராமன் மீது கொண்ட பற்றினால் பாரம்பரிய நெல் ரகங்களை நீ மீட்க வேண்டும் என்று சொன்னதோடு சில ரக நெல் விதைகளையும்  அவரிடம் கொடுத்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்படி திருத்துறைப்பூண்டி கட்டிமேடு ஆதிரங்கம் கிராமத்தைச்  சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமன் தனது தேடல்களை  தொடங்கினார். ஒவ்வொரு நெல் ரகமாக தேடித் தேடி ஒவ்வொரு  ஊராக ஓடினார்.  இறுதியில் 174 பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரித்தார். சேகரித்த நெல்லை தனது வீட்டில் வைத்து கண்காட்சி  நடத்தவில்லை. மாறாக ஒவ்வொரு மே மாதமும் நெல் திருவிழாவை நடத்தி திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதையைக் கொடுத்து அடுத்த திருவிழாவுக்கு வரும் பொது 4 கிலோ நெல்லை வாங்கி  அடுத்தடுத்த விவசாயிகளுக்கு கொடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் பாரம்பரிய நெல் விவசாயத்திற்கு விவசாயிகளை தயார்படுத்திவிட்டார்.

 

nel jayaraman



இதனால் இவருக்கு குடியரசுத் தலைவர்  விருதும் மற்றும் பல விருதுகளும் கிடைத்தது. விருதுகளுக்காக நெல்லை சேகரிக்கவில்லை. என் மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இயற்கையாக விளையும் பாரம்பரிய நெல் வேண்டும் என்பதால் தான் சேகரித்து வருகிறேன் என்று தொடர்ந்து தனது சேவையை செய்து வந்தார். விவசாயிகளால் கைவிடப்பட்ட பழைய பாரம்பரிய நெல் ரகங்கள் கருப்பு கவுணி, அறுபதாம் குறுவை, குள்ளக்கார், கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குடவாலை, காட்டுயானம், கூம்பாலை, குழியடிச்சான் போன்ற நெல் 174 நெல் ரகங்களை  சேகரித்தவர் கடந்த 2012 ம் ஆண்டு தனது வீட்டுக்குள் 1969 ம் ஆண்டு அறுவடையின் போது சாமிக்காக துணியில் முடிந்து வைத்த ஒரு படி கைவரச்சம்பா நெல்லை விதைத்து சுமார் 400 கிலோ அறுவடை செய்து கைவரச்சம்பா என்ற பாரம்பரிய நெல்லையும் மீட்டார்.

பாரம்பரிய நெல் விதைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முளைக்கும், விளைச்சலும் தரும் என்பதற்கு கைவரச்சம்பாவே சான்றாக இருந்தது. நஞ்சை விதைக்கும் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட வீரியமில்லா விதைகளால் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டப்பட்ட நம் பாரம்பரிய நெல் விதைகளை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து இன்று தமிழகம் முழுவதும் நஞ்சில்லா உணவுக்காக பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வந்த நெல் ஜெயராமனுக்கு கொடிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மனிதனுக்கு எந்த நோய் வரக் கூடாது என்று 174 ரக பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தாரோ அவருக்கே அந்த நோய் வந்துவிட்டது. பாரம்பரிய நெல் ஜெயராமனை அந்த கொடிய நோயிலிருந்து மீட்போம் என்று உணர்வுள்ள அத்தனை உள்ளங்களும் கலங்கினார்கள். கைகொடுத்து துணைக்கும் நிற்கிறார்கள்.  கிட்னியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். நஞ்சில்லா உணவுக்காக போராடி விதைகளை சேகரித்த விவசாயி நெல் ஜெயராமனுக்கு சிகிச்சை என்றதும் நேரில் கூட சென்று பார்க்காமல் தனது உதவியாளர் மூலம் அப்பல்லோ நிர்வாகத்திடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமன் மருத்துவ செலவுகள் அத்தனையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் முதலில் வைப்புத் தொகைக்கு ரூ. 1 லட்சம் காசோலையும் வழங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி மருத்துவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தும் வந்துள்ளார். 

 

Rice



இந்த நிலையில் தான் தனக்கு மருத்துவ உதவி செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் பார்க்க வேண்டும் என்று நெல் ஜெயராமன் சொல்ல அப்பல்லோ வந்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் மருத்துவ உதவிக்கு நன்றிகள் என்று நெல் ஜெயராமன் சொல்ல.. ”அய்யா நீங்க இந்த நாட்டின் பொக்கிஷம்”  உங்களை காக்க  வேண்டியது எங்கள் கடமை. அந்த கடமையை தான் செய்திருக்கிறேன். அதுக்காக நன்றி சொல்லாதீங்க. உங்களைப் போன்ற விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். உங்க மருத்துவச் செலவு மட்டுமில்லை உங்க மகன் சீனிவாசராமின் முழு படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் பூரண குணமடைஞ்சுடுவீங்க என்று நெகிழ்ச்சியாக சொல்ல.. அவர் கைகளை பற்றிக் கொண்டார் நெல் ஜெயராமன்.

இதைத்தொடர்ந்து நடிகர்கள் சத்தியராஜ், சூரி, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.க. வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், அ.ம.மு.க கலைராஜன், டி.ஜி.பி. ராசேந்திரன் மற்றும் பலரும் போய் பார்த்து நலம் விசாரித்துச் சென்றனர். இந்த தகவல்கள் நக்கீரன் இணையத்தில் செய்திகளாக வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சென்று பார்த்து மருத்துவச் செலவை ஏற்பதாக சொன்னார்கள். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். இப்படி அனைவரும் சென்று பார்த்து அவர் மீண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் கொடிய நோய் அவரை உயிருடன் விட நினைக்கவில்லை. தொடர் சிகிச்சையில் இருந்த நெல் ஜெயராமன் 2018 டிசம்பர் 6 ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிழந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனைபேரும் நெல் ஜெயராமனை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அவரது இழப்பை விவசாயிகள் பெரிய இழப்பாக அனுசரித்தனர். ஆனாலும் அவர் செய்து வந்த அத்தனை பணிகளையும் அவரது அண்ணன் மகன் உள்பட அவர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். அதனால் தான் இத்தனை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுத்த  நெல் ஜெயராமன் பற்றி பாடப்புத்தகத்தில் சிறு பகுதி  சேர்க்கப்பட்டிருந்தாலும் அவரது நினைவு நாளான டிசம்பர் 6 ந் தேதியை பாரம்பரிய நெல் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது நக்கீரன் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை டிசம்பர் 6 ந் தேதி அவரது சொந்த கிராமத்தில் மட்டுமல்ல கிரீன் நீடா அமைப்பினர் சென்னையில் அனுசரிக்க திட்டமிட்டு பிரபலங்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அழைப்பு கொடுத்துள்ளனர். மேலும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் நெல் ஜெயராமன் நினைவு தினத்தை அனுசரிக்கிறார்கள்.

 

rice



இது குறித்து கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேல்  "நெல் ஜெயராமன் அவரது வாழ்க்கை முழுவதும் பாரம்பரிய நெல் தேடலுக்காகவே செலவிட்டார். அதனால் தான் 174 ரகங்களை மீட்டார். மீட்டதோடு விவசாயிகளுக்கு கொடுத்து மறு உற்பத்தியும் செய்ய வைத்துவிட்டார். அவரது இழப்பு இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பெரிய இழப்பு.  அவர் மீட்ட ரகங்களை தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செய்த பாரம்பரிய நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பதால் மறுபடியும் உற்பத்தி செய்ய அச்சப்படுகிறார்கள். அவர் மீட்ட பாரம்பரிய நெல் அரிசி மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும். அதனால் இன்று பணக்காரர்கள் அந்த ரகங்களை உற்பத்தி செய்தோ வாங்கியோ சாப்பிடுகிறார்கள்.

ஆனால்ஏழை மக்களுக்கு நஞ்சான உணவே கிடைக்கிறது. அடித்தட்டு ஏழை மக்களுக்கும் நஞ்சில்லாத இயற்கையாக விளையும் பாரம்பரிய அரிசி கிடைக்க அரசுகள் உதவி செய்ய வேண்டும். மேலும் பாரம்பரிய நெல் உற்பத்திக்கு உழவு செலவு உள்ளிட்ட செலவினங்களை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கினால் சில ஆண்டுகளிலேயே தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய நெல் உற்பததி அதிகரிக்கும்.  மேலும் அவரைப் பற்றி அடுத்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் சென்னையில் மாணவர்கள் மத்தியில் அஞ்சலி நிகழ்ச்சியை வைத்திருக்கிறோம். இந்த நிலையில் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பற்றி நடிகர்கள் சத்தியராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் சிறிய வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.  

ஒட்டுாமொத்த விவசாயிகளின் கோரிக்கை, நெல் ரகங்களை மீட்டுத்தந்த ஜெயராமனின் மறைந்த நாளான டிசம்பர் 6 பாரம்பரிய நெல் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் பாரம்பரிய நெல் தினத்தில் பாரம்பரிய நெல் விளைச்சலில் சாதித்த விவசாயிகளுக்கு நெல் ஜெயராமன் பெயரில் விருது வழங்க வேண்டும். இதை தமிழ்நாடு அரசு ஏற்று கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார். நமது கோரிக்கையை விவசாயிகளும் முன் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது..இனி அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டும். 

Next Story

நெல் ஜெயராமன் வயலில் பாரம்பரிய கிச்சிலி சம்பா பொங்கல்

Published on 15/01/2019 | Edited on 15/01/2019

 

n

   

அழிவின் விளிம்பில் இருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராம் சில மாதங்களுக்கு முன்பு கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது இறப்பு பாரம்பரிய நோயில்லா உணவை தேடும் மக்களின் பேரிழப்பாக அமைந்துவிட்டது.   ஆனாலும் அவரால் தனது சொந்த கிராமமான ஆதிரெங்கம் கிராமத்து வயலில் பாரம்பரிய நெல்லரிசி பொங்கல் விழாவை 2008 ம் ஆண்டு தொடங்கினார். 

 

இந்த ஆண்டு அவர் இல்லை என்பதால் அந்த விழாவை மறந்துவிடாமல் அவரது குடும்பத்தாரும் அவரின் தேடலுக்கு துணை நின்றவர்களும் இயற்கை ஆர்வலர்களும் நெல் ஜெயராமன் வயலில் நெல் கதிர் தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிச்சிலி சம்பா சன்னரக புத்தரிசில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.  இவ்விழாவில் கீரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கலந்து கொண்டார். 

 

n

 

ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் பாரம்பரிய நெல்லரிசி பொங்கல் விழா நடக்கும் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.   அதே போல நீடாமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் வழங்கியதுடன் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை பொங்களை கொட்டாடினார்கள் கிரீன் நீடா மற்றும் கலாம் மாணவர்  அமைப்பினரும்.

 

n

 

இந்த பசுமை பொங்கல் விழாவில் அதிகாரிகளும் பள்ளி நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.  கஜாவால் இழந்த மரங்களைவிட 10 மடங்கு மரங்களை வளர்ப்போம்.. புயலை தாங்கி வளரும் பனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்றனர் கிரீன் நீடா அமைப்பினர்.