NEET examination is a problem for the medical framework says Ezhilan MLA

Advertisment

நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே முதுநிலை மருத்துவர் கலந்தாய்வு இரண்டு சுற்று முடிந்திருக்கும் நிலையில், மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வுக்குச் சலுகையாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தேர்வு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மருத்துவத்தில் முதுநிலை படிப்புக்கு நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது. இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் நீட் தேர்வால் பயனில்லை என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்ட மன்ற உறுப்பினர் எழிலன், “நீட் தேர்வு என்பது பெற்றோர் - மாணவர்களின் பிரச்சனை கிடையாது; இது மருத்துவ கட்டமைப்பிற்கு உண்டான பிரச்சனை; மாணவர்களை தரப்படுத்துவதாக செயற்கையான முறையை கொண்டு வந்து திணிக்கிறார்கள்; நீட் தேர்வு தனியார் பல்கலைக்கழகங்களின் கட்டண கொள்ளையை தடுக்கவில்லை; நீட் தேர்வில் 0% எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்று சொன்ன பிறகு, தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இடைத்தரகர்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது; நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அது நிவர்த்தி செய்யப்படவில்லை; அனிதா, பிரதிபா போன்ற சமூக விளிம்பு நிலை மக்களை மருத்துவர் ஆகாமல் தடுத்ததுதான் இதன் ஒரே வேலையாக இருக்கிறது; நீட் தேர்வு என்பது தரம் சம்பந்தப்பட்ட தேர்வே கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.