NEET examination malpractice DMK struggle postponed

Advertisment

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.