Skip to main content

நீட் தேர்வில் மதிப்பெண் குறைவு விரக்தியால் இளைஞர் தற்கொலை! 

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

 

neet exam mark student incident police investigation

தலைவாசல் அருகே,நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றுவிடுவோம் என்ற விரக்தியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள வடகுமரையைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயி. இவருடைய மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 20). தனியார் பள்ளியில் படித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிளஸ்2 படிப்பை முடித்திருந்தார். 

 

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை முதன்முதலில் எழுதினார். அதில் 158 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 

 

இதையடுத்து இரண்டாவது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார். இதில், இயற்பியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் இந்தமுறையும் தன்னால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாது என்றும் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

 

இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 2- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், எத்தனை மதிப்பெண் பெற்றோம் என்று கூட பார்க்காத சுபாஷ் சந்திரபோஸ், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

 

இதையறிந்த பெற்றோர் பதறியடித்துக் கொண்டு, அவரை உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை (நவ. 6) காலை சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். 

 

இதற்கிடையே அவர் நீட் தேர்வில் 261 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தலைவாசல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு நடந்த அன்றும், அதற்கு அடுத்த நாளும் ஓரிரு மாணவர்கள் நீட் தேர்வு மீதான அச்சம் காரணமாக தற்கொலை செய்திருந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு வெளியான பிறகும் மேலும் ஒரு இளைஞர் நீட் தேர்வினால் தற்கொலை செய்த சம்பவம் தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.