Skip to main content

நீட் தேர்வில் மகன் வெற்றி பெற முடியாமல் போன காரணம்... கஸ்தூரி மகாலிங்கம் தாயார் பேட்டி

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
kasturi mahalingam



நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்று நீட்டுக்கு தந்தையை பலி கொடுத்த கஸ்தூரி மகாலிங்கம் 84 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்ற சம்பவம் கிருஷ்ணசாமியின் கும்பத்தினரை மேலும் சோகமடையவே செய்துள்ளது.

"என் மகன் நீட் தேர்வில் தோல்வியடைய மத்திய, மாநில அரசுகளே காரணம்" என்கிறார் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாய் பாரதி மகாதேவி.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். கடந்த மே 6ம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

 


தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்து, அப்பா எங்கே என்று தேடினார். தந்தை மாரடைப்பார் மரணம் அடைந்த செய்தி கேட்டு கதறினார். 

கிருஷ்ணசாமியின் இறப்பு தமிழகத்தையே போராட்ட களமாக மாற்றியது. கிருஷ்ணசாமியின் இறப்புக்கு வந்த அரசியல் பிரமுகர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். கிருஷ்ணசாமியின் இறப்புக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்றும், மகாலிங்கம் தோல்வி அடைந்தால் இரண்டு அரசுகளுமே பொறுப்பு என்றும் கூறினர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. கஸ்தூரி மகாலிங்கத்தின் தேர்வு முடிவு எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரோ 84 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.

 

 


கஸ்தூரி மகாலிங்கத்தின் தாய் பாரதி மகாதேவி கூறுகையில், "என்னோட மகன் தோல்வியடைய இரண்டு அரசுகளுமே காரணம். நீட் தேர்வு எழுத அண்டை மாநிலங்களுக்கு அனுப்பியதே முதற்காரணம். எனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை என் மகன் கஸ்தூரிக்கு தெரிந்து தேர்வு எழுத போகவே மறுத்துள்ளான். கனத்த மனத்தோடு சென்றவனுக்கு தேர்வின் கவனத்தோடு தந்தையின் உடல்நிலையே மனதில் ஒடியிறுக்கு அதுதான் மகனின் தோல்விக்கு காரணம்" என்றார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்பா எங்கே?" இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கும் கேள்வி!!! சிவசங்கர் சிறப்பு கட்டுரை!

Published on 09/05/2018 | Edited on 11/05/2018
kasturi mahalingam


இரண்டு நாட்கள் கடந்தும் அந்த முகம் மனதை வாட்டுகிறது. மன அழுத்தம் குறையவில்லை.
 

அந்தக் காட்சியை காணக் கூடாதென்று மனம் நினைக்கிறது. ஆனால் அந்த பிள்ளையின் உடன் இருக்க தோன்றுகிறது. தொலைக்காட்சிகளின் இணைய நேரலைக் காட்சிகள் நெஞ்சை அறுத்தது.
 

தேர்வு மய்யத்தில் இருந்து வெளியே வந்த பிள்ளை கேட்ட அந்தக் கேள்வி காலத்திற்கும் மனதை அறுத்துக் கொண்டே இருக்கும். "அப்பா எங்கே?".
 

யார் பதில் சொல்வது. யாருக்கு பதில் சொல்ல தைரியம் இருந்தது. பதில் சொல்ல வேண்டியவை கல் நெஞ்சுக்கார மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும். அவை சார்பாக யாரும் இல்லை. சம்பந்தமில்லாதவர்கள் சுற்றி நிற்கிறார்கள். 

 

kasturi mahalingam


 

விளக்குடியில் கிளம்பும் போது, என்ன நினைத்துக் கொண்டு கிளம்பி இருப்பார்கள் அப்பாவும், மகனும். நூலகராக பணிபுரிந்த தந்தை கிருஷ்ணசாமிக்கும், மாற்றுத் திறனாளியான தாய் ஆசிரியை பாரதிமகாதேவிக்கும் இந்த நீட் தேர்வில் மகன் வெற்றிப் பெற்று தம் குடும்ப நிலையை உயர்த்துவான் என்று நினைப்பு இருந்திருக்கும்.


மகன் கஸ்தூரி மகாலிங்கம் தன் வாழ் நாள் கனவு நிறைவேறும், தான் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற எண்ணத்தோடு தான் கிளம்பியிருப்பான்.
 

எளிய குடும்பமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குடும்பம் கிருஷ்ணசாமி - பாரதிமகாதேவி தம்பதி குடும்பம். அதனால் தான் தனியார் பள்ளியில் மகனை படிக்க வைத்திருக்கிறார்கள்.
 

பள்ளி இறுதியில் நல்ல மதிப்பெண் எடுத்து, மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து மருத்துவராவான் என்பது அவர்கள் கனவு. 

 

modi-eps-ops


 

ஆனால் அவர்கள் கனவில் மண் அள்ளிப் போட்டது பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு. மருத்துவ கல்விக்கு "நீட்" தேர்வை கொண்டு வந்து திணித்தார்கள், கடந்த ஆண்டு. 
 

அதற்கு முந்தைய ஆண்டு வரை நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு இருந்தது.  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க அரசை ஆட்டுவிக்கும் பா.ஜ.க, நீட் தேர்வு விஷயத்தில் அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசை பணிய வைத்தது. 
 

ஆனால், கடைசி வரை நீட் தேர்விலிருந்து விலக்கு தருகிறோம் என்று தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்தது மத்திய அரசு. 

 

Anita


 

நம்பி ஏமாந்தவர்களில் ஒருவர் அப்பாவி மாணவி அனிதா. மத்திய அரசோடு உச்சநீதிமன்றமும் ஏமாற்றிய நிலையில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார் அனிதா.  நீட் தேர்விற்கு எதிராக அனிதா ஏற்றிய நெருப்பு அணையவில்லை. 
 

இந்த ஆண்டு அடுத்த சோகம் நிகழ்ந்து விட்டது.
 


நீட் தேர்வு தான், வேறு வழியில்லை என்று தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அடுத்த அடியை கொடுத்தது மத்திய அரசு.
 

தேர்வு எழுத, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மய்யத்தை ஒதுக்கியது, தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ அமைப்பு. 
 

காரணம் கேட்டால், தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களாம். என்ன பைத்தியக்காரத்தனம் இது. இதை கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் எதற்கு அரசு, நிர்வாகம் நடத்துகிறார்கள்.
 

அப்படியே அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததாக இருக்கட்டும், அதற்கு ஏற்ப கூடுதல் மய்யங்கள் திறப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது. கேரளாவில் கூடுதல் மய்யம் திறக்க முடியும் என்றால், தமிழகத்தில் திறக்க முடியாமல் தடுத்தது எது ?
 

இந்த எந்த கேள்விகளுக்கும் விடை இல்லாத நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகினார்கள். தமிழகத்திலேயே மய்யங்கள் திறந்து, தமிழக மாணவர்கள் இங்கேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது உயர்நீதிமன்றம்.
 

அதை செய்து கொடுக்க வேண்டிய சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழக மாணவர்களின் அவலக் குரலுக்கு காது கொடுக்கவில்லை.  தன் நிலையை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தை அணுகியது சி.பி.எஸ்.சி.

 

cbse


 

அனிதாவின் எளியக் குரலுக்கே காது கொடுக்காத அமைப்பு தானே அந்த உச்சநீதிமன்றம். இப்போது மாத்திரம் தமிழ் பிள்ளைகளின்  சிரமத்தை புரிந்துக் கொள்ள முன் வருமா?
 

தமிழ் மக்களின் குரலுக்கு இரங்க  மனம் இல்லா உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ நிலைப்பாடே சரி என்றது. சி.பி.எஸ்.இ அமைப்பின் அரக்கத்தனத்திற்கு வழிமொழிந்தது. தமிழ் நாட்டு மாணவர்கள் அடுத்த மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்தது.
 

இருப்பதோ இடையில் இரண்டு நாட்கள் தான். பயண ஏற்பாட்டிற்கு பரிதவித்து போனார்கள் தமிழக மாணவர்களின் பெற்றோர்கள்.
 

தமிழக மாணவர்களுக்காக வாதிட்டிருக்க வேண்டிய தமிழக அரசு கள்ள மௌனம் காத்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எரியும் நெருப்பில் எண்ணெயை உற்றினார்.
 

வெளி மாநிலத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு முன் பணம் ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவிட்டு தன் 'கடமை'யை கடமைக்கு செய்து ஒதுங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

ernakulam busstand.jpg


அய்யாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத கிளம்பினார்கள். அவர்களில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் அடங்குவர்.
 


மொழி தெரியாத ஊரான எர்ணாகுளம் சென்றடைந்தவர்கள், தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்கள். விடுதி மேலாளர் ஓர் தமிழர் என்பது மாத்திரமே அவர்களுக்கு கிடைத்த ஓரே ஆறுதல்.
 

 

 

500 கிலோமீட்டர் தூரம், பத்து மணி நேரம் பயணித்து, மொழிபுரியா மாநிலத்திற்கு வந்ததிலேயே மகாலிங்கத்திற்கு மனதில் ஓர் அழுத்தம் வந்திருக்கும். அவர் தந்தை கிருஷ்ணசாமிக்கும் வந்திருக்கும். 
 

உடல் நலக்குறைவாக உணர்ந்த கிருஷ்ணசாமி, மகன் மகாலிங்கத்தை விடுதி மேலாளர் உடன் அனுப்பி வைத்து விட்டு ஓய்வெடுத்திருக்கிறார். மகனை மாத்திரமல்ல உலகையே பிரியப் போகிறோம் என கிருஷ்ணசாமி அறிந்திருக்க மாட்டார்.
 

கஸ்தூரி மகாலிங்கம் தேர்வறைக்கு சென்றார். பிள்ளை அங்கே தேர்வெழுதிக் கொண்டிருக்கும் போதே இங்கே தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. தேர்வு எழுதி முடித்து வெளிவந்த மகாலிங்கத்திற்கு தந்தை இறந்த செய்தி தெரியாது.
 

பள்ளிக்கு வெளியே கிருஷ்ணசாமி இறப்பு செய்தியை அறிந்த மற்ற தமிழகப் பெற்றோர்கள் அந்தப் பிள்ளையை காண, துளிர்க்கும் கண்ணீரோடு காத்திருந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேமராவுடன் குவிந்து விட்டனர். போலீசாரின் கடும் பாதுகாப்பு.
 

இந்த பரபரப்புகளால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. கஸ்தூரி மகாலிங்கத்தை அடையாளம் கண்டு காவல்துறையினர் வெளியே அழைத்து வந்திருக்கின்றனர். 
 

ஒரு சோக திரைப்படத்தின் உச்சக்கட்ட அவலக் காட்சியை கூட அது போல் சிந்திக்க இயலாது.
 

வெளியில் வந்த மகாலிங்கம் கேட்ட கேள்வி, "அப்பா எங்கே?".
 

ernakulam busstand.jpg


சுற்றி இருந்த பெற்றோர்கள் அந்தக் கேள்வியால் கதறி துடித்திருந்திருக்கின்றனர். செய்தி புரியாமல் மலங்க, மலங்க விழிக்கும் பிள்ளை மகாலிங்கத்தின் முகத்தை நேரலையில் கண்ட எந்த தகப்பனையும், தாயையும் கதறடித்திருக்கும். அதற்கு அசங்காதவர்கள் மிருகங்களாகத் தான் இருக்க வேண்டும்.

மகாலிங்கத்தை அரவணைத்து வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் செய்தியை சொல்லவில்லை. யாருக்கு தான் அந்த  செய்தியை சொல்ல தைரியம் வரும்.
 

அங்கிருந்து பயணித்து மருத்துவமனை பிணவறையை அடைந்து தந்தை முகத்தை காணும் வரை அந்தப் பிள்ளை என்ன, என்ன நினைத்திருப்பான். என்ன தான் காவல்துறையினராக இருந்தாலும் உடன் பயணித்த அதிகாரிகள் மனம் எவ்வளவு பதைத்திருக்கும்.
 

பிணவறையில் தந்தை முகத்தை பார்த்த பிள்ளை எப்படி துடித்திருப்பான். நினைக்கவே மனம் கனக்கிறது.
 

அந்தக் கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும், " அப்பா எங்கே?".
 

neet



இந்த நிலைக்கு காரணமான மத்திய அரசின் பிரதமர், பொய் வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர்,  துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் காதுகள் அதிகாரப் பஞ்சால் அடைக்கப்பட்டிருக்கலாம். அதனால், அந்தக் கேள்வி இப்போது காதில் விழாமல் இருக்கலாம். 
 

அந்த அதிகாரப் "பஞ்சு" ஒரு நாள் அடிக்கும் காற்றில் பறந்து போகும். அப்போது காதை மாத்திரமல்ல, நெஞ்சையும் குடையும் அந்தக் கேள்வி. 
 

உங்கள் இறுதி காலம் நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக மாத்திரம் இருக்காது. உங்கள் பிள்ளைகள் அந்தக் கேள்வியை கூட கேட்க முடியாமல் தவித்துப் போவார்கள். அதேக் கேள்வி தான்....
 

"அப்பா எங்கே?"

sivashankar-dmk

Next Story

உயிர்ப்பறிப்பு தொடர்கிறது! நீட்டில் நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை! பெ. மணியரசன்

Published on 06/05/2018 | Edited on 06/05/2018
P. Maniyarasan


நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது. நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு! இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புகள் அதிகமாகத் தமிழ்நாட்டைத்தான் பாதிக்கின்றன. 
 

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் திணித்த “நீட்” தேர்வு கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிவாங்கியது. இந்த ஆண்டும், பலரை அத்தேர்வு பலி வாங்கி வருகிறது. 
 

கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது, திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியாகியுள்ளார்! 
 

கேரள மாநிலம் – எர்ணாக்குளத்தில் மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாக்குளத்திற்கு நிற்கக்கூட இடமில்லாமல், கழிவறைக்குள் ஒண்டிக் கொண்டே நீண்ட தொலைவுக்கு விடிய விடிய தொடர்வண்டிப் பயணம் செய்தனர். இதனால், கிருஷ்ணசாமி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் இறந்துள்ளார். 
 

இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உயிர் ஈ – எறும்பு உயிர்களைவிடவும் மலிவானவை! இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்து, இந்திய அரசின் உரிமைப் பறிப்புகளால் நேர்ந்த தமிழர் உயிர்ப் பறிப்புகள் ஏராளம்! ஏராளம்! 
 

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால், சிங்களப் படையினால் கடலில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் 600 பேருக்கு மேல்! இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத்துக்கு இந்தியா உதவி செய்ததைக் கண்டித்து தீக்குளித்து மாண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளம்! காவிரி உரிமை மறுக்கப்பட்டு, வேளாண்மை செய்ய வழியின்றி தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாட்டு உழவர்கள் பல நூறு பேர்!
 

இப்பொழுது, எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள் – இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
 

நடுவண் பாடத் திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ.) என்பது, பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ள பாடத்திட்ட நிறுவனம்! தனியார் ஆதிக்கமும் வடநாட்டுத் தலைமையும் கொண்ட நடுவண் பாடத்திட்ட வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்? 
 

நீட் தேர்வை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்ப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை இராசத்தானத்திலும், கேரளத்திலும் தேர்வெழுத மேற்படி வாரியம் அலைக்கழித்துள்ளது. சனநாயகமற்ற இந்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, இயற்கை நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்கியது. 
 

தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் உடனே தர வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ஆளுங்கட்சியே முன்வந்து நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து நிரந்தரமாக நீட் தேர்வை விரட்டும் வகையில், ஒருங்கிணைந்த போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.