Skip to main content

கல்வி முறையை சீர்குலைக்கும் ‘நீட்’ தேவையா? முடிவுரை எழுத வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

 

எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் நீட் தேர்வு என்பது ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்  வருவாய் ஈட்டித் தரும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியதைத் தவிர, மருத்துவக் கல்வித் தரத்தை  உயர்த்தவோ, மாணவர்கள் நலனுக்காகவோ எதையும் சாதிக்கவில்லை. பயனற்ற நீட் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் இயல்பாக கல்வி பயிலும் முறையிலேயே தலைகீழ் மாற்றங்களை நீட் தேர்வு ஏற்படுத்தியிருப்பதும், இதனால் மாணவர்கள்  கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதும் உறுதியாகியுள்ள நிலையில், களநிலையை உணர்ந்து  தேவையான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

 

Anbumani Ramadoss



2019-20 ஆம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில்  மருத்துவப் படிப்பில் சேர்ந்த 4202 மாணவர்களில் 2,916 பேர், அதாவது 70 விழுக்காட்டினர்  பழைய மாணவர்கள் ஆவர். இவர்களில் 2371 பேர் கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். இருவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களாவர். நடப்பாண்டில் மருத்துவம் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 2,762 பேரில், 85 விழுக்காட்டினர், அதாவது 2402 பேர் பழைய மாணவர்கள் ஆவர். அதேபோல், சி.பி,எஸ்.இ மாணவர்களில் 36% பேர் பழைய மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
 

மருத்துவப் படிப்பில் சேர்ந்த பழைய மாணவர்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் ஏதோ ஒரு ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து    நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏதோ ஒரு ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவர்களில் பலர் 3 அல்லது 4 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்பதையும் உணர முடிகிறது.
 

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை, அந்தந்த ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அரிதிலும் அரிதாக எவரேனும் சிலர் மீண்டும் தேர்வு எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேரக் கூடும். ஒரு கட்டத்தில் அதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தகைய சூழலில், அதிகபட்சமாக 2015-ஆம் ஆண்டில் 6 பழைய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 2016-ஆம் ஆண்டில் 35 பழைய மாணவர்களும், 2017-ஆம் ஆண்டில் 491 பழைய மாணவர்களும், 2018-ஆம் ஆண்டில் 2371 பழைய மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான  இடங்கள் பழைய மாணவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். இது நல்லதல்ல.


 

ஒரு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அந்த ஆண்டில் பொதுத்தேர்வுக்கும் படித்து, நீட் தேர்வுக்கும் படித்து அதிக மதிப்பெண் பெறுவது சாத்தியமல்ல. அதனால், அந்த குறிப்பிட்ட ஆண்டில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் புகழ்பெற்ற நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து, நீட் தேர்வுக்கு மட்டும் தயாராகி அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்கின்றனர். ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான  கட்டணத்தில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பணம் படைத்தவர்கள் முதல் ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்விலும் வெற்றி பெறுவது சாத்தியமாகிறது.
 

இதன்மூலம் இரு உண்மைகள் உறுதியாகின்றன. முதலாவது மருத்துவப் படிப்பில் சேர ஓராண்டுக்கும் கூடுதலான தயாரிப்பு அவசியமாகிறது; இரண்டாவது லட்சக்கணக்கில் பணம் செலுத்தி நீட் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்வி என்பது சாத்தியமாகிறது. இந்த இரண்டுமே கல்வி முறையை சிதைப்பவை ஆகும். இந்த இரண்டுமே சம வாய்ப்பு தத்துவத்தை தகர்க்கின்றன. பணம் இருந்தால் மட்டும் தான் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியும்; நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டும் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும்; பணம் இல்லாத, நீட் பயிற்சி பெற வாய்ப்பற்ற ஊரக  ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பை மறந்து விட வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசின் சார்பில் இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று... நீட் தேர்வு மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கும். இரண்டாவது... மருத்துவக் கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கும். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. ஓராண்டில் 12-ஆம் வகுப்பு தேர்விலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கடுமையான பயிற்சியின் உதவியுடன் நீட்  தேர்விலும் தேர்ச்சி பெறக் கூடியவர்களால் மருத்துவக் கல்வியின் தரம் அதிகரிக்கும் என்பது வடிகட்டிய மூட நம்பிக்கையாகவே இருக்கும். மருத்துவப் படிப்பில் சேர ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்காமல், பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வரை செலவழிப்பதை ஊக்குவிக்கும் நீட் தேர்வு தான் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கும் என்று மீண்டும், மீண்டும் கூறுவது நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது.


 

12-ஆம் வகுப்பை ஓராண்டில் முடித்து, அடுத்த ஆண்டில் கல்லூரி கல்விக்கு மாறுவது தான் இயல்பான கல்வி ஆகும். இதை சிதைத்து 12&ஆம் வகுப்பு ஓராண்டு, அதன்பின் நீட் பயிற்சிக்கு பல ஆண்டுகள் என்பது மாணவர்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட மாணவர்களால் பிற்காலத்தில் கனிவான மருத்துவம் அளிக்கும் மருத்துவராக எப்படி திகழ முடியும்?
 

எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் நீட் தேர்வு என்பது ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்  வருவாய் ஈட்டித் தரும் வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியதைத் தவிர, மருத்துவக் கல்வித் தரத்தை  உயர்த்தவோ, மாணவர்கள் நலனுக்காகவோ எதையும் சாதிக்கவில்லை. எனவே, பயனற்ற நீட் தேர்வை  ரத்து செய்து விட்டு, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தும் பழைய முறைக்கு மாற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.