மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்! -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

need to provide relief to the hill tribes! -High Court orders Tamil Nadu government

தமிழக மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று, ஆய்வு செய்து, அவர்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடரந்துள்ளார். அந்த மனுவில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திகளைச் சுட்டிக் காட்டி,மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியினக் குழந்தைகள் வேறு வேலைக்குச் செல்வதாகவும்கூறினர். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு, அவர்களுக்குத் தொடர்ந்து, நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

highcourt relief Tribal
இதையும் படியுங்கள்
Subscribe