Skip to main content

மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் மாற்றம் வேண்டும்...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

 need change in the grievance meeting ...


தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

 

ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்ட அரங்கில் காத்திருப்பார்கள்.  அப்போது மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள், தகுதி இருப்பின் உடனடியாக தீர்வு காண்பதும் அதில் சிக்கல்கள் இருப்பின் அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காண அறிவுறுத்தப்படுவதும் நடைமுறை. அதேபோன்று, பட்டா மாற்றம், அரசு உதவித்தொகை பெற, புதிய குடும்ப அட்டை பெற, மாற்றுத் திறனாளிகளின் குறைகள்- தேவைகள், இப்படிப் பல்வேறுபட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைகளுக்குத் தீர்வு காணப்படுவதும் வழக்கம். 


கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும், மக்கள் குறை கேட்புக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா பரவல் மேலும் பரவாமல் இருக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டத்தினை இணையத்தளம் வழியாக நடத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள், கம்ப்யூட்டர் சென்டர்கள் ஆகிய இடங்களில் சென்று தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா மூரி, கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தளம் மூலம் திங்கள்கிழமை தோறும் மக்களின் குறைகளைப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகளை தீவிரமாகச் செயல்படுத்திவருகிறார். 

 

இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காரணம், மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளைக் கூறுவதற்கு 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும். இப்படி மனுகொடுக்கச் செல்வதற்கு பஸ் செலவு, சாப்பாட்டுச் செலவு, பயண நேரம் இவையெல்லாம், இணையவழிக் கூட்டத்தால் மிச்சம் ஆகின்றன. அருகில் உள்ள இ-சேவை மையங்கள், கம்ப்யூட்டர் சென்டர்களில் சென்று தங்கள் குறைகளை இணையவழி மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் செலவு சுமார் 20 முதல் 60 ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. 

 

Ad


இப்படி, இணையத்தளம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, வாரம்தோறும் திங்கள்கிழமை, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களில் இருந்தும் வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வர வேண்டும். தற்போது இணையவழி குறைகேட்புக் கூட்டமாக மாற்றப்பட்டு நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலகங்களில் இருந்தபடியே கணினியில், மனுக்களைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, வீடியோ கான்ஃப்ரன்சில் அலுவலக குறைககளைப் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறி, அந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. 


இதனால் அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் பணிச்சுமை, பயணச் சுமை, நேரச் சுமை குறைகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் நிறைய செலவுகள் குறைகின்றன.  உதாரணத்திற்கு அதிகாரிகளின் வாகனங்களுக்கு போடப்படும் டீசல், பெட்ரோல் போன்ற போக்குவரத்துச் செலவுகள், வாகன தேய்மானம் இவைகள் அனைத்தும் அரசுக்கு மிச்சம். ஆட்சியர் அலுவலகம் மூலம் பெறப்படும் புகார் மனுகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும். அப்படி காலதாமதம் செய்யும் அரசு அதிகாரிகளையும் அலுவலர்களையும் இணையவழி மூலமே தொடர்புகொண்டு கேள்வி கேட்பதற்கும் வழிவகை உண்டு. 

 

Nakkheeran

 

இதனால் பெருமளவில் லஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, தமிழகம் முழுவதும் இதேபோன்ற நடைமுறையை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.