நெடுவாசல் என்ற கிராமத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 16 ந் தேதி முதல் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு பசுமையான கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டதால் வெகுண்டெழுந்த விவசாயிகள் போராட்டங்களை தொடங்கினார்கள். துணைக்கு அரசியல்கட்சித் தலைவர்களும், மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், சமூகநல அமைப்புகள், சினிமா துறையினர் என்று உலகமெங்கும் இருந்து ஆதரவு கரம் நீட்டியதுடன் போராட்டங்களிலும் பங்கெடுத்தனர். சுமார் 197 நாட்கள் நடந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
போராட்டக் காலத்தில் இந்த கிராமத்திற்கு வந்த அத்தனை பேரும் இத்தனை பசுமையான கிராமத்தில் ஹைட்ரோ கார்ப்பன் எடுத்து பாலைவனமாக்கவிடமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். கிராம சாலைகள் இரு பக்கமும் அடர்ந்த மரங்கள் நிழல்களாக நின்றது. போராட்ட களம் என்று சொல்லப்பட்ட நாடியம்மன் கோயில் திடலில் அடர்த்தியான ஆலமரங்கள் பந்தல்களாக அமைந்தது. அதனால் போராட்டத்திற்கு பந்தல் அமைக்காமல் இயற்கையின் நிழலில் அமர்ந்து போராடினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை வரவேற்ற நெடுவாசல் மக்கள் இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு பசியை போக்க ஆலமர நிழலில் சமையல் செய்து தினம் ஒரு வகையில் உணவு பறிமாறினார்கள். இயற்கை எழிலோடு ஆலமரங்களும், தென்னை மரங்களும் சுற்றிலும் இருக்க நடுவில் பெரிய குளம். அந்த குளமும் கரையில் நின்ற மரங்களின் அழகும் போராட்டத்தில் இருந்த மக்களை களைப்பின்றி உற்சாகமாக வைத்திருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஆனால் இன்று.. அந்த இயற்கை எழில் கொஞ்சிய நெடுவாசல் கிராமத்திற்குள் நுழையவே இரு நாட்கள் கடந்தது. உள்ளூர் இளைஞர்கள் சாலைகளில் கிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். அதன் பிறகு அந்த சாலை வெறிச்சோடி குச்சிகளை நட்டு வைத்ததுஅங்கொன்றும் இங்கொன்றுமாக மொட்டை மரங்கள் காணப்பட்டது. போராட்டக் களம் என்று சொல்லப்பட்ட நாடியம்மன் கோயில் திடலில் நின்ற ஆலமரங்கள் கஜாவின் கோர தாண்டவத்தால் சூரையாடப்பட்டு ஒடிந்து தொங்குகிறது. புல லட்சம் பேருக்கு நிழல் கொடுத்து உணவு வழங்கிய இடத்தில் நின்ற ஆலமரங்களும் அடியில் போடப்பட்டிருந்த கல் பலகைகளும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இந்த கிராமத்தில் இருந்த சுமார் 250 எக்டேரில் இருந்த தென்னை மரங்கள் கீழே கிடக்கிறது. சுமார் 20 எக்டேரில் கரும்பு, 5 எக்டேர் எழுமிச்சை, 20 எக்டேர் பலா, 10 எக்டேர் வாழை, 20 எக்டேர் தேக்கு, 150, எக்டேர் நெல், இன்னும் சுமார் 50 எக்டேரில் இருந்த மா, புளி, குமிழ், சவுக்கு என்று அத்தனை மரங்களும், பயிர்களும் நாசமாகி அந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த கிராம இளைஞர்கள் கூறும் போது.. நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், அதே போல தஞ்சை மாவட்டத்தில் ஆவணம், குருவிக்கரம்பை, பேராவூரணி உள்ளிட்ட சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் தாயுள்ளம் கொண்ட கிராமங்கள் அதனால்தான் தங்கள் கையில் என்ன இருக்கோ அதை அத்தனை பேருக்கும் பகிர்ந்து கொடுத்து பழக்கப்பட்டவர்கள் இந்த மக்கள். ஆனால் கடந்த ஆண்டு சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களின் உதவியோடு போராட்டக் களத்துக்கு வந்த லட்சக்கணக்காணவர்களுக்கு பசியோடுபோகக் கூடாது என்பதற்காக உணவு கொடுத்து அனுப்பினோம். இன்று நெடுவாசல் மட்டுமின்றி எங்களுக்கு துணையாக நின்ற அத்தனை கிராமங்களும் நிலைகுழைந்து நிற்கிறது. எங்கள் வாழ்வாதாரம் அத்தனையும் அழிந்துவிட்டது. இப்பவும் கூட எங்களுக்குள் ஆறுதல் சொல்லிக் கொண்டு நிற்கிறோம். இயற்கையால் இத்தனை அழிவுகள் இருந்தாலும் மனதிடம் உள்ளது நிச்சயம் எழுந்து நிற்போம். மற்றவர்களுக்கு துணையாக நிற்போம் என்றவர்கள்.. இந்த பேரழிவுகளுக்கு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை முறையாக வழங்க வேண்டும். அந்த நிவாரணம் ஒட்டு மொத்தமாக கஜாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுந்து நடக்க உதவும் வகையில் இருக்க வேண்டும் என்றனர்.