Skip to main content

சொன்னதை செய்யலன்னா ஒரு வருடத்தில்  ராஜினாமா...  பத்திரம் எழுதி வைத்த நெடுவாசல் வேட்பாளர்!

Published on 26/12/2019 | Edited on 27/12/2019

இளைஞர்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும் டாக்டர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவோம் என்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் அரசியல் கட்சிகளை சாராமல் களமிறங்கி கலக்கி வருகின்றனர். 

இவர்களின் பிரச்சாரங்களில் மற்றவர்களை குறை சொல்லி வாக்கு சேகரிப்பது அல்ல. நான் வெற்றி பெற்றால் என்ன செய்வேன் என்பதே இவர்களில் பிரச்சாரமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். ஆனால் சொன்னதை செய்ய போராடுவோம். நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்குகிறது. அதனால் கிராமங்களை சிறப்பாக்கினால் நாடு தானாக வளமாகும். வெளிப்படையான நிர்வாகம், கிராம சபையில் மக்களை கூட்டி கிராமத்தின் தேவைகளை தீர்மானமாக போட்டு தேவைகளை பூர்த்தி செய்வோம். இப்படி தான் செய்ய வேண்டும் என்பதை கலாம் நினைத்தார். அவரது கனவை நிறைவேற்றுவோம் என்கிறது இளைஞர்களின் குரல்கள்.

 

neduvasal local election candidate


இந்தநிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிழக்கு (இந்த ஊரை அனைவருக்கும் தெரியும்)  ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பலரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் தலைவர்கள் தாங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர். புதிய வேட்பாளர்கள் நாங்கள் வந்தால் என்ன செய்வோம் என்று வாக்கு சேகரிக்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் ஒரு வேட்பாளர் ராம்குமார்., டெல்டா விளை நிலங்களை பாலைவனமாக்கும் கெயில், மீத்தேன் திட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கத்துக்குட்டி திரைப்படத்தின் தயாரிப்பாளர். கடந்த 6 மாதங்களாக 4 தாலுகாக்களை உள்ளடக்கி நீர்நிலைகளை சீரமைத்து தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க தன்னார்வமாக இயங்கும் கைஃபா இயக்கத்தின் தலைவர். இவரும் போட்டியிடுகிறார்.

 

neduvasal local election candidate


3 பக்கத்தில் வாக்குறுதிகள். ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் கால அவகாசம் என்று அச்சிட்டு வீட்டுக்கு வீடு கொடுத்ததுடன் ஒரு பக்கத்தின் தன்னைப் பற்றியும் வெளியிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ராம்குமார் தான் இன்று வியாழக்கிழமை மாலை நெடுவாசல் கிராமத்தின் காவல் தெய்வமான பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வாசலில் நின்று ஒரு 20 ரூபாய் பத்திரைத்தை எடுத்து படித்தார். அந்தப் பத்திரம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ராம்குமார் எழுதிக் கொடுப்பது. 2021 ஜனவரி 26 ந் தேதி நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராமத்தினரின் பெரும்பாண்மையானோர் என்னை பதவி விலக சொல்வதால் சுயநினைவோடு பதவி விலகுகிறேன். அதற்கான ராஜினாமா கடிதமாக இதை ஏற்க கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதி கையெழுத்திட்ட அந்த பத்திரைத்தை பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் போட்டார்.

 

neduvasal local election candidate


ஏன் இப்படி என்ற நமது கேள்விக்கு.. என்னை என் கிராம மக்கள் தலைவராக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில். ஒரு மாதத்தில் இருந்து எனது பணிகள் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட காலம் கொடுத்திருக்கிறேன். அந்த காலக்கட்டத்திற்குள் அந்த பணிகள் செய்து முடிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் பல பணிகளை செய்ய முடியும். அந்தப் பணிகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், உறுதியும் உள்ளது.

அப்படி நான் செய்யத் தவறினால் என்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் சரியாக ஒரு வருடம் முடியும் போது அதாவது 2021 ஜனவரி 26 ந் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் என் பதவியை ராஜினாமா செய்வேன். அந்த ராஜினாமா கடிதம் தான் ரூ. 20 பத்திரத்தில் எழுதி எல்லாருக்கும் காவல் தெய்வமான பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் போட்டிருக்கிறேன்.

 

neduvasal local election candidate


நான் சொன்ன வாக்குறுதிகளை செய்துவிட்ட பிறகும் கூட சிலர் என் பதவியை பறி்க்க நினைக்கலாம். அப்படி பறிபோனால் என் கிராம மக்கள் ஒரு வருட செயல்பாடுகளைப் பார்த்து என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இன்று போட்டியிடும் ஏராளமான இளைஞர்கள் மட்டுமின்றி போட்டியிடாத இளைஞர்களும் சொல்வதை செய்யாத உங்கள் பதவிகளை ராஜினாமா செய்வீர்களா என்று கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் முதல் முறையாக நெடுவாசல் ராம்குமார் ராஜினாமா பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.