Skip to main content

நெற்பயிரில் காளை உருவத்தை உருவாக்கிய இயற்கை விவசாயி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

natural farmer created image of bull paddy

 

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் நெற்பயிரால் காளை மாட்டின் ஓவியத்தை வரைந்துள்ள பிரமிக்கத்தக்கக் கழுகுப் பார்வை காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் நீர்முளை அருகே உள்ள மாராச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு காளிதாஸ். இயற்கை விவசாயியான இவர் பாரம்பரிய நெல் ரகத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் உழவுக்கு உற்றத் தோழனாக இருக்கும் மாடுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் தனது  வயலில் சின்னார் என்ற பாரம்பரிய நெல் ரகத்தைப் பயிரிட்டுள்ளார். அதனைச் சுற்றி மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும் குதிரைவாலி வளர்த்து அவற்றை ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஓவியமாகப் படைத்துள்ளார். 115 நாள் வயதுடைய குறுவை பயிரான சின்னார் என்ற பாரம்பரிய ரகம் மருத்துவ குணம் உடையது. 

 

சிகப்பு நிற கதிர்களை உடைய இந்தப் பயிர் மழை வெள்ளத்தினால் கீழே சாயாத தன்மையுடையது. இதனைக் காளையின் உருவத்தில் வயலில் நட்டு வைத்து, அதனைச் சுற்றி தீவனப்பயிரான குதிரைவாலியை வளர்த்துள்ளார். தற்போது அந்தப் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், உயரத்திலிருந்து பார்த்தால் காளை உருவம் தெரிகிறது. இதனை ட்ரோன் உதவியுடன் ஆகாயத்திலிருந்து கழுகுப் பார்வையில் படமாக்கி உள்ளார். 

 

வயல்வெளிகள், வீடுகள், குளங்கள் இவற்றுக்கு நடுவே தெரியும் பசுமை ஓவியம் அனைவரது கவனத்தை  ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.