Skip to main content

கலாஷேத்ரா விவகாரம்: இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் போராட்டம் அறிவிப்பு!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

national federation for women announcement against kalakshetra foundation 

 

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (nfiw) மாநில நிர்வாகக் குழு கூட்டம் மாநில தலைவர் பி.பத்மாவதி தலைமையில் நேற்று (11.04.2023) திருச்சியில் நடைபெற்றது.

 

2023ம் ஆண்டிற்கான உறுப்பினர் பதிவு, கிளை, ஒன்றிய மாநாடுகளை ஏப்ரல் 30க்குள் முடிப்பது, மாவட்ட மாநாடுகள் குறித்த திட்டமிடல், கோவிட் சர்வேக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம், கலாஷேத்ரா பாலியல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றை குறித்து திட்டமிடப்பட்டது. மாநில செயலாளர் ஜி.மஞ்சுளா, மாநில துணை தலைவர்கள் சுந்தரவள்ளி, தமயந்தி, ராஜலட்சுமி, மாநில துணை செயலாளர்கள் கண்ணகி, டி.பி.லலிதா, வளர்மதி உட்பட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

 

கலாஷேத்ரா மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிகள் அனைவரும் தண்டனை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த தீர்மானத்தில், ‘பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த ஒரு பேராசிரியர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மார்ச் 30 அன்று கலாஷேத்ரா மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழக அரசும் மாநில மகளிர் ஆணையமும் இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்டு விசாரணை மற்றும் குற்றவாளிகள் கைது என உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வரவேற்கிறது. இருப்பினும், திரை கலைஞர் அபிராமி போன்றவர்களை வைத்து பொய் செய்திகளைப் பரப்புவது, புகார் மனு அளித்த மாணவிகளின் நடத்தை குறித்து தவறான பிரச்சாரம் செய்வது, மாணவிகளை மிரட்டுவது போன்ற கேடுகெட்ட செயல்களை கலாஷேத்ரா நிர்வாகம் தற்போது செய்து வருகிறது. 

 

கலாஷேத்ரா நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஒருவாரம் கடந்தும் இன்னும் விசாரணையைத் துவங்கவில்லை. எனவே 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து மாநில மகளிர் ஆணையம் பெற்றுள்ள புகார்களின் அடிப்படையில் உரிய மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அனைவரும் உரிய தண்டனை பெற மாநில மகளிர் ஆணையமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பள்ளி கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசு அனைத்து இடங்களிலும் உள்புகார் குழுக்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். புகார் குழுக்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். மேலும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டத்தின்படி  மாவட்டம் தோறும் உள்ளூர் புகார் குழுக்களையும் அமைக்க வேண்டும். இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாத நிறுவனங்களின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்திய மாதர் தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 

national federation for women announcement against kalakshetra foundation 

 

இந்தப் பிரச்சனையில் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான முயற்சியில் எல்லா சட்டவிதிகளையும் அப்பட்டமாக மீறி உள்ள கலாஷேத்ரா நிர்வாகம், புகார் குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஆகியோரின் செயல்பாடுகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை கோரி வரும் 15 ஆம் தேதி தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்