Skip to main content

ஜனவரி 8 பாரத் பந்த்... தொழிற்சங்கள் அறிவிப்பு!!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மத்திய அரசைக் கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பில் 2020 ஜனவரி 8 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம் நடக்கவுள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள தொழிற்சங்க அமைப்புகள் மண்டல அளவில் ஆயத்த மாநாடுகளை நடத்தி வருகிறது. 
 

nation wide strike


அதன் வரிசையில் ஈரோட்டிலும் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், தொழிலாளர்கள் நூறாண்டுகள் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாகச் சுருக்கி தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதைக் கைவிட வேண்டும் எனவும், தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும், தொழிலாளர்களின்குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.6,000 ஆக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நிரந்தரத் தன்மை உள்ள தொழில்களில் காண்ட்ராக்ட்  தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்தை உருவாக்கி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்வதென புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரியான சம்மேளனங்களின் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இப்பொது வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றி பெறச்செய்யத் திட்டமிடுவதற்காக சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய நான்கு மையங்களில் அனைத்துச் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள்  பங்கேற்கும் மண்டல  மாநாடுகளை நடத்துவதென அனைத்துச் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்ட  நிர்வாகிகள் பங்கேற்ற அனைத்து சங்க மண்டல ஆயத்த மாநாடு ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எல்.பி.எப். ஈரோடு மாவட்டச் செயலாளர் ஜோ.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க ஒற்றுமைக்கு அடித்தளமிட்டவர், மிகச்சிறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் மறைவுக்கு அஞ்சலியும் திருவள்ளுவரை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி அனைத்துச் சங்கங்களின் சார்பில் ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசினார். இம்மாநாட்டில் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், எச்.எம்.எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, எம்.எல்.எப் துணைத் தலைவர் மு.தியாகராஜன், ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட அனைத்துச் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மத்திய அரசை கண்டித்தும், 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 8-1-2020 அன்று நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை கொங்கு மண்டலத்தில் (எட்டு மாவட்டங்களில்) முழு வெற்றி பெறச் செய்வது என்றும், அதற்காக அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வது என்றும் மாநாடு முடிவு செய்தது. பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்கு பல்வேறு அமைப்புகளின் ஆதரவைக் கோருவது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.