Skip to main content

''மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது''-மோடி பேச்சு  

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

 '' The nation is proud of the fishermen '' - Modi speech

 

தமிழக தலைநகரான சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள் விளையாட்டு  அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசாக அளித்தார். அதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வரவேற்புரையாற்றினார். அதேபோல் முதல்வரும் வரவேற்புரையாற்றினார். பின்னர்  வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை தொடங்கிவைத்தார்.

 

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி ''வணக்கம் சென்னை'' ''வணக்கம் தமிழ்நாடு'' என தமிழில் உரையை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசுகையில், ''இனிய வரவேற்பளித்த மக்களுக்கு நன்றிகள். சென்னையிலிருந்து முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை தொடங்கியுள்ளோம். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும். சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 636 கிலோமீட்டர் தூரம் கல்லணையை புதுப்பிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு. நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்'' என்ற அவர், ''வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்'' என்ற அவ்வையார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

 

 '' The nation is proud of the fishermen '' - Modi speech

 

அதேபோல் ''ஆயுதம் செய்வோம்... நல்ல காகிதம் செய்வோம்'' என்ற பாரதியின் பாடலையும் குறிப்பிட்டு ஆயுதங்களின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.

 

மேலும் பேசிய அவர் ,''உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் இந்தியாவில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சமூக பொது கட்டமைப்புகளை அதிவிரைவாக மேம்படுத்தி வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீனவர்களை நினைத்து தேசம் பெருமை கொள்கிறது. அவர்களுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. இலங்கைவாழ் தமிழ் சகோதர சகோதரிகள் மீது மத்திய அரசு அக்கறை காட்டி வந்துள்ளது. 

 

 Modi returns to Coimbatore on Feb 25 ...

 

வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

 

இறுதியாக 'வணக்கம்' என தெரிவித்த பிரதமர் முதல்வர், துணைமுதல்வருடன் கைகளை கோர்த்து உயர்த்தி பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

 

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேரு அரங்கில் பிரதமருக்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட அறையில் பிரதமரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பத்திலிருந்து பதினைந்து நிமிடம் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பில் முதல்வர், அரசு கோரிக்கைகளையும், அதேபோல சில அரசியல் சார்ந்த விஷயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் துணைமுதல்வர் ஓபிஎஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.