ADVERTISEMENT

நடராஜன் இறப்பு - பரபரப்பு இல்லாத சொந்த கிராமம்!

02:12 PM Mar 20, 2018 | Anonymous (not verified)


புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான எம்.நடராஜன் நள்ளிரவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்.நடராஜன், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார்.

ADVERTISEMENT


இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தஞ்சாவூருக்கு தெற்கே ஆறாவது கிலோ மீட்டரில் விளார் கிராமம் இருக்கிறது. நடராஜனின் பூர்வீக கிராமமான அந்த கிராமத்தில் மிக பிரமாண்டமான தோட்டத்துடன் கூடிய வீடும் உள்ளது. வீட்டிற்கு எதிரில் நடராஜனுக்கு சொந்தமான திடலும் இருக்கிறது. அந்த திடலிலேயே நடராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் விளார் கிரமத்தில் உள்ளத்திடலில் நடந்து வருகிறது. ஆனால் நடராஜனின் வீட்டிலோ யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.

ADVERTISEMENT


நெடுஞ்சாலைத்துறையின் உதவியோடு விளாருக்கு செல்லும் சாலையின் இருபுறமும் இருக்கும் புள், பூண்டு, செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். அதேபோல, தஞ்சை நகராட்சியின் உதவியோடு தஞ்சாவூர் அருளானந்தநகரில் இருக்கும் வீட்டுக்கு போகும் வழிகளையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

நடராஜனின் சொந்த கிராமமான விளாரில் நடராஜன் இறப்புக்குறித்து எந்தவிதப் பரபரப்பும் காணப்படவில்லை. அதேபோல், நடராஜனால் உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றமும் பரபரப்பு இல்லாமல் தட்டியால் கட்டப்பட்டிருக்கிறது.

நடராஜனின் உடல் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட பின்னர் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நாளை மாலை 4 மணிக்கு விளாரில் அடக்கம் செய்யப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT