'Is the Nataraja temple maintained from the Dikshitars' own funds?'- Charity department order to answer

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சொத்துக்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்ய அனுமதி கேட்டபோது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை என ஒத்துழைக்க மறுத்தனர். பின்னர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கணக்குகளைச் சரிபார்க்க ஒப்புதல் அளித்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழு கோவிலில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் கணக்குகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறையினர் கடிதம் அளித்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லை எனக் கோவில் தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளருக்குக் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் 'நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சமுதாயத்தினால் மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டதற்கான ஆதாரம், கோவில் தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள்,கோவிலில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறையில் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றால் அது குறித்த வரவு செலவு கணக்குகள், கோவில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் மேற்கண்ட நிலம் மன்னர்களால் அல்லது அரசால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா? என்பதற்கான ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தவறும் பட்சத்தில் தங்களால் அளிக்கக்கூடிய விவரங்கள் எதுவும் இல்லை என்ற அடிப்படையில் ஆவணங்கள் எதுவும் இன்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் தங்களால் அளிக்கப்பட்டு வருகின்றது என முடிவு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துக்கொள்கிறோம்.' என்றுஅந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.