Skip to main content

மாநில அந்தஸ்துக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன் - புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.

 

narayanasamy interiview about pudhucherry politics

 

அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவது அரசின் கொள்கை. இதை நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளது. காங்கிரஸ்- தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் டில்லியில் மாநில அந்தஸ்து கேட்டு தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என தற்போது பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். 15-ஆவது நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க கோரிக்கை விடுத்தேன். அவ்வாறு செய்தால் நமக்கு முறையான மானியம் கிடைக்கும்.

மத்திய அரசின் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, அங்கன்வாடி உணவு, சர்வ சிக்க்ஷா அபியான் உள்ளிட்ட திட்டங்களில் 60 சதவீதம்தான் மானியம் தரப்படுகிறது. 90 சதவீதம் தரவேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

கவர்னருக்கு அதிகாரம் தொடர்பாக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தன்னிச்சையாக அதிகாரமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. கவர்னர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தடை கேட்டு மேல்முறையீடு செய்தும், தடை விதிக்க மறுக்கப்பட்டது. மேலும் கடந்த 7-ஆம் தேதி அமைச்சரவையில் நிலம், நிதி தொடர்பாக எடுக்கப்படும்  முடிவுகளை அமல்படுத்தவும் தடை விதித்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவர்னர் தரப்பில், மஞ்சள் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது. அதற்கு லட்சுமிநாராயணனின் வழக்கறிஞர், ‘அமைச்சரவை முடிவில் கோர்ட் தலையிட அதிகாரமில்லை’ என்று தெரிவித்தார். அதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கப்படாத நிலையில், ஐகோர்ட் தீர்ப்பையே கடைபிடிக்க வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் பட்ஜெட் தாக்கல் செய்வது தடைபடாது.

டில்லியில் கடந்த 15ம் தேதி நடந்த நிதி ஆயோக் முதல்வர்கள் மாநாட்டில், நீர் சேமிப்பு முக்கிய கருத்தாக ஆலோசிக்கப்பட்டது. ஏரி, குளம் துார் வாருதல், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு, பாதுகாக்கப் பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல், நீர் வீணாவதை தடுத்தல் குறித்து விவாதிக்கப் பட்டது. நீர் நிலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு முக்கிய நீர் கொள்கையை அறிவித்துள்ளது. பிரதமர் விவசாயத்திற்கு நீர் சேமிப்பு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி பல நீர் நிலைகளில் மத்திய, மாநில அரசு இணைந்து துார்வார நிதி ஆதாரத்தையும் கொடுத்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த ஆண்டு 16 ஏரிகள் துார்வார நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏரி சங்கங்கள் எங்களுக்குத்தான் துார் வாரும் பணியை வழங்க வேண்டும் என கவர்னரிடம் முறையிட்டனர். அரசு டெண்டர் மூலம் குறைந்த தொகைக்கு துார் வார முன்வருபவர்களிடம் கொடுக்க கூறியதை கவர்னர் ஏற்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து ஏரி சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.அந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்து, குறைந்த தொகைக்கு ஏரிகளை துார்வாரும் அமைச்சரவை முடிவை இறுதி செய்தது. அரசு முடிவின்படி செயல்பட்டிருந்தால் ஓராண்டிற்கு முன்பே ஏரிகள் துார்வாரப்பட்டிருக்கும். பருவ மழை இல்லாததாலும், காவிரி நீர் கிடைக்காததாலும், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீரை சேமிப்பது அத்தியாவசிய கடமை. புதுச்சேரி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வாழ்வாதாரம் நீரில் உள்ளது. பூமிக்கடியில் இருக்கும் நீரை அதிகளவு உறிஞ்சினால் எதிர்கால சந்ததி பெருமளவு பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.