நன்னிலம் அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் மாணவி ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினாரா என்கிற கோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மகிழஞ்சேரி கண்ணிக்கோயில் தெருவை சேர்ந்தவர்கள் செந்தில் - மஞ்சுளா தம்பதி. இவர்களுக்கு மோனிகா (17), சந்தோஷ் (15) ஆகிய இரண்டு பிள்ளைகள். மோனிகா அருகில் உள்ள பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதியிருந்தார்.
இந்தநிலையில் மோனிகா தினமும் இரவு தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள தனது பாட்டி சரோஜாவின் வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டு, காலையில் எழுந்து தனது வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மோனிகா தனது வீட்டுக்கு வரவில்லை என பெற்றோர்களிடம் வந்து கூற பதறிப்போன மோனிகாவின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
அப்போது பாட்டி சரோஜா வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள வயல்வெளியில் மோனிகா பிணமாக கிடந்தார். அவரது முழங்கை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பிராண்டிய காயங்கள் இருந்தன. மகள் மோனிகா பிணமாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். அவர்களது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாட்டி வீட்டில் தூங்குவதற்காக சென்ற மாணவி வயல்வெளிக்கு எப்படி சென்றார். அவரது உடலில் காயங்கள் எப்படிவந்தது அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.