Skip to main content

நந்தீஸ் - சுவாதி மரணத்தை ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!; இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!! 

Published on 18/11/2018 | Edited on 18/11/2018
ர்

 

நந்தீஸ் & சுவாதி மரணத்தை ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஓசூர் உதவி ஆட்சியரிடம் (ஆர்டிஓ) கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஓசூர் அருகே, ஆணவக்கொலை செய்யப்பட்ட நந்தீஸின் சொந்த ஊரான சூடுகொண்டப்பள்ளிக்கு ஓசூர் ஆர்டிஓ விமல்ராஜ் நேற்று (நவம்பர் 17, 2018) நேரில் சென்று, நந்தீஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நந்தீஸ் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஓசூர் வந்திருந்தார்.

 

r


அப்போது ஆர்டிஓ விமல்ராஜை சந்தித்த பா.ரஞ்சித், 'நந்தீஸ் - சுவாதி படுகொலையை, சாதி ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரமாகும்,' என்றார். 


இதையடுத்து, நந்தீஸின் தம்பதியினரின் கொடூர கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் தலைமையில், ஓசூர் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட ஆர்டிஓ, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சூடுகொண்டப்பள்ளி கிராமத்திற்கும், நந்தீஸ் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


எஸ்சி, எஸ்டி சிறப்பு சட்டத்தின் கீழ் இந்த கொலை வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 120 நாள்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


ஜெய்பீம், டிஒப்எப்ஐ ஆகிய இயக்கங்கள் சார்பிலும், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால், வாயில் முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


டிஎஸ்பிக்கள் மீனாட்சி (ஓசூர்), சங்கர் (தேன்கனிக்கோட்டை) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி (ஹட்கோ), முருகன் (சூளகிரி), எஸ்ஐக்கள் கண்ணன், பார்த்திபன், உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 


ஓசூர் ராம் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஓசூர் திமுக முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில துணை செயலாளர் வன்னியரசு, அமைப்பு செயலாளர் கோவேந்தன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அசம்பாவிதங்களைத் தடுக்க, உள்ளூர் போலீசாருடன் நக்சல் தடுப்புப்பிரிவு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.