தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தீவுத் திடலில் (13.01.2023) மாலை 05:00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை சங்கமம் விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கனிமொழி ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதியிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செம்மொழிப் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் ஜனவரி 14 முதல் 17 வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை நகர மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.