Skip to main content

எஸ்.பி.வேலுமணியின் பெயரில் மோசடி; அரசு வேலை வாங்கித் தருவதாக 38 லட்சம் ரூபாய் சுருட்டல்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

In the name of former minister S.P. Velumani Rs. 38 lakh fraud

 

சேலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கார் ஓட்டுநர் எனக்கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

 

சேலம் மணியனூரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மனைவி தேன்மொழி (30). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் காசி விஸ்வநாதன் மற்றும் உறவினர்கள்  சீனிவாசன், சுமதி ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ''கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பட்டணத்தைச் சேர்ந்தவர் சுதாகரன். அவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கார் ஓட்டுநராக வேலை செய்து வருவதாக எங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு அமைச்சருடன் நெருக்கமான பழக்கம் இருப்பதாகக் கூறிய அவர், எஸ்.பி.வேலுமணியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் காட்டினார்.    

 

சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று சிலரை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி எங்களுக்கு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறினார். நாங்களும் அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு மொத்தம் 9 பேர் சேர்ந்து 37.50 லட்சம் ரூபாயை சுதாகரன் கேட்டுக் கொண்டதன் பேரில்  அவரிடம் கொடுத்தோம்.     

 

இதையடுத்து அவர், எங்களுக்கு அரசு வேலை கிடைத்ததற்கான பணி ஆணைகளை வழங்கினார். அந்த பணி ஆணைகளுடன் சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று விசாரித்தபோதுதான் அவை போலியானவை என்பது தெரிய வந்தது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுதாகரன் எங்களிடம் பணம் வசூலித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார். எங்கள் பணத்தைக் கேட்டு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவரும், அவருடைய மனைவி பிரபாவதியும் ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.    

 

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் புஷ்பராணி முதல்கட்ட விசாரணை நடத்தினார். அதில் சுதாகரன் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுதாகரன், அவருடைய மனைவி பிரபாவதி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சரின் கார் ஓட்டுநர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் சுருட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.