Skip to main content

இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்! 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

நாமக்கல் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். 


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (27). நாமக்கல் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுடன் ஒரே வீட்டில் அனிதாவின் தந்தை கருப்பசாமியும் (50) வசித்து வருகிறார்.


கடந்த அக்.14ம் தேதி இரவு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், விமல்ராஜின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த விமல்ராஜையும், அனிதாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் மற்றொரு அறையில் படுத்திருந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் வெட்டிவிட்டு ஓடினர். கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கருப்பசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

namakkal young couple incident court surrender police investigation


நாமக்கல் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் எலக்ட்ரானிக் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வரும் நிக்கல்சன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்துதான் இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. 


கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண், கோவையில் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருகிறார். அவரும் நிக்கல்சனும் நெருக்கமான நண்பர்கள். இந்தப்பழக்கத்தில் நிக்கல்சன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அவருடைய மனைவிக்கும் அருணுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நிக்கல்சன் அருணுடன் முன்பே தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, நிக்கல்சனின் மனைவி திடீரென்று மாயமானார். தனது மனைவியை அருண்தான் கடத்தி வைத்திருப்பதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

namakkal young couple incident court surrender police investigation


இதற்கு பழிதீர்க்காமல் விட மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அருணின் மீதுள்ள ஆத்திரத்தில் அவருடைய தங்கை அனிதா, கணவர் விமல்ராஜ் ஆகியோரை கூட்டாளிகளுடன் சென்று வெட்டி கொன்றுள்ளார். நிக்கல்சனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் சரணடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய நிக்கல்சனின் கூட்டாளிகளான நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 'பழக்கடை' ரகுவரன் (28), கோபி (23) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். விரைவில் நிக்கல்சனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வரும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.