Skip to main content

ஏழல்ல... 12 போலி திருமணங்களாம்.... திடுக்கிடும் வீடியோ அம்பலம்

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Namakkal woman sandhiya married 12 men

 

நாமக்கல் அருகே, போலி திருமணங்களை நடத்தி நகை, பணத்துடன் தப்பி ஓடும் கும்பல் இதுவரை 12க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்களை போலியாக திருணம் செய்து பணம், நகைகளை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (35). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் செப். 7ம் தேதி, கொளக்காட்டுப்புதூரில் உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. திருமணமான இரண்டாவது நாளே (செப்.9) புதுப்பெண் சந்தியா, தனபாலை ஏமாற்றி விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அவர் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

சந்தியாவை பெண் பார்த்து கொடுத்த மதுரையைச் சேர்ந்த தரகர் பாலமுருகன் என்பவர் தனபாலிடம் 1.50 லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் பெற்றுக்கொண்டதும், பாலமுருகன் தலைமையிலான கும்பல் ஊர் ஊராகச் சென்று மாப்பிள்ளை வேட்டை நடத்தி போலி திருமணங்கள் மூலம் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

 

Namakkal woman sandhiya married 12 men

 

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு வாலிபருக்கும் சந்தியாவின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, அவரை திருச்செங்கோட்டில் திருமணம் செய்து கொள்ள செப்.23ம் தேதி நாள் குறித்து இருந்தனர். அன்றைய தினம் திருச்செங்கோடு வந்த சந்தியா, பெண் தரகர் தனலட்சுமி, உறவினர்கள் ஐயப்பன், கார் ஓட்டுநர் ஜெயவேல், உறவினர் கவுதம் ஆகிய ஐந்து பேரையும் தனபாலும் அவருடைய உறவினர்களும் சுற்றி வளைத்துப் பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

இவர்களில், தலையில் லேசான காயம் அடைந்திருந்த ஐயப்பன், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர் திடீரென்று தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மற்ற நால்வரையும் பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள் கைது செய்தார். இவர்கள் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், ''நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் காங்கேயம், கரூர், திருப்பூர் ஆகிய இடங்களில் தனபாலுடன் சேர்த்து 6 பேரை திருமணம் செய்ததும், புகுந்த வீட்டில் சில நாள்கள் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து விடுவோம்'' என்றும் கூறியுள்ளார். இந்தநிலையில் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஏழாவதாக ஒருவரை திருமணம் செய்ய முயன்றபோது தாங்கள் சிக்கிக்கொண்டதாகவும் கூறியள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, திருச்செங்கோட்டில் வைத்து சந்தியா உள்ளிட்டோரை அலேக்காக தூக்கிய தனபால் கோஷ்டியினர், நேரடியாக அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்காமல் ரகசியமாக ஒரு இடத்திற்கு தூக்கிச்சென்று அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது ஐயப்பன், ஜெயவேல் ஆகியோரிடம் தனபால் தரப்பினர் உண்மைகளைக் கூறும்படி மிரட்டி, சில தகவல்களை பெற்றுள்ளனர். அதை காணொளி காட்சியாகவும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

 

அந்த காணொளி காட்சியில், தாங்கள் இதுவரை 12க்கும் மேற்பட்ட நபர்களை கல்யாணம் செய்து நகை, பணத்தை ஏமாற்றி இருப்பதாக ஐயப்பன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தில் 7 பேரை மட்டுமே ஏமாற்றி உள்ளதாக கூறியுள்ளனர். 

 

Namakkal woman sandhiya married 12 men

 

இந்த பரபரப்புக்கு இடையே, பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சந்தியாவுக்கும் தனக்கும் செப். 16ம் தேதியன்று, திண்டுக்கல் அருகே வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறியுள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும், இதற்காக 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் பேசி, முதல்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். தனது வருங்கால மனைவிதானே என்பதால் சந்தியாவுக்கு புதிதாக ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

 

காவல்துறை விசாரணையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாமக்கல் சுற்று வட்டாரத்தில் 3 பேரை திருமணம் செய்து, நகை, பணத்தை சுருட்டிக் கொள்ள திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கைதான சந்தியா அளித்துள்ள வாக்குமூலத்தில், ''தரகர்கள் பாலமுருகன், அவருடைய கூட்டாளிகளான ரோஷினி, தனலட்சுமி, ஈரோடு மாரிமுத்து, உறவினர் ஐயப்பன் ஆகியோர், என்னை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். அதனால் வேறு வழியின்றி அவர்களின் மோசடிக்கு நானும் உடந்தையாக இருந்து வந்தேன். என்னைப் போல இன்னும் நான்கு பெண்கள் அவர்களிடம் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ரோஷினி, பாலமுருகன், ஐயப்பன், தனலட்சுமி ஆகியோர் தரகர்களாக மட்டுமின்றி சூழ்நிலைக்கு தகுந்தாற்போல அக்கா, மாமா, பெண்ணின் உறவுக்காரர் என்றெல்லாம் நாடகமாடுவார்கள். 

 

நான் திருமணம் செய்து கொள்ளும் ஆணுடன் இரண்டு முதல் அதிகபட்சம் ஐந்து நாள்கள் தங்கி இருப்பேன். மாப்பிள்ளை வீட்டார் அசந்த நேரம் பார்த்து அங்கிருந்து நகை, பணம் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு தப்பிச்சென்று விடுவேன். என்னை அழைத்துச் செல்வதற்காக அதே ஊரில் பாலமுருகன் தலைமையிலான கும்பல் காரில் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சிலநேரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் பாலில் தூக்க மாத்திரகைளை போட்டு தூங்க வைத்துவிட்டும் இவ்வாறு தப்பிச்சென்று இருக்கிறேன். எங்களிடம் ஏமாந்த யாரும் அவமானங்களுக்கு பயந்து கொண்டு இதுவரை புகார் கொடுக்காததால் நாங்களும் இந்த மோசடி வேலைகளை துணிச்சலாக தொடர்ந்து செய்து வந்தோம்'' என்று கூறியுள்ளார். 

 

இந்த மோசடிக்கெல்லாம் தரகர் பாலமுருகன்தான் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.