இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதலுக்கான அரசு விழா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொம்மைக்குட்டைமேடு என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த விழாவின் முடிவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் என்பவர் தேசிய கீதம் ஒலிப்பதை கவனிக்காமல் செல்போனில் பேசியபடியே எழுந்து நிற்காமல் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
சிவப்பிரகாசம் இவ்வாறு செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவானது வைரலான நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சிவப்பிரகாசத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.