Skip to main content

ஒரே இரவில் 9 வீடுகளில் திருட முயற்சி; கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

 Namakkal, they ate the food at home and then drank alcohol and stole

 

பள்ளிபாளையம் அருகே, ஒரே இரவில் 9 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களுக்கு நகை, பணம் கிடைக்காத விரக்தியில்  ஒரு வீட்டுக்குள் புகுந்து வயிறார சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, மது குடித்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.     

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது கணபதிபாளையம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மே 30ம்  தேதி இரவு, பூட்டப்பட்டு இருந்த 9 வீடுகளின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோ, மேஜை டிராயர் ஆகியவற்றில் நகை,  பணம் ஆகியவற்றை தேடிப் பார்த்துள்ளனர்.  ஆனால் எந்த வீட்டிலும் மர்ம நபர்களுக்கு தேவையான நகையோ, பணமோ கிடைக்கவில்லை. இதனால் அந்த கும்பல், அதே பகுதியில் உள்ள சவுபாக்கியவதி கட்டடத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்த 15 வீடுகளை வெளிப்புறமாக தாழிட்டுவிட்டு, ஜான்ஸா என்ற தொழிலாளியின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.  அந்த வீட்டிலும் பீரோ, அரிசி பாத்திரங்கள் என சல்லடை போட்டுத் தேடிய கும்பலுக்கு ஆறுதலாக ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.     


இதையடுத்து பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த நல்லம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டு பூட்டை உடைத்தும், உள்ளே சென்றுள்ளனர்.  அங்கேயும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.  தொடர்ந்து 9 வீடுகளின் பூட்டை உடைத்து ரிஸ்க் எடுத்து உள்ளே நுழைந்துசென்று தேடிப்பார்த்தும் மர்ம நபர்களுக்கு பணம், நகைகள் கிடைக்காமல் போனதால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.    இதையடுத்து செல்லம்மாள் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவருடைய வீட்டு சமையல் அறைக்குள்  நுழைந்து மிச்சம் இருந்த சாப்பாட்டை சாம்பார் ஊற்றி தின்றுள்ளனர். பிறகு அவர்கள் கொண்டு சென்று மதுபானத்தையும் அந்த வீட்டிலேயே  ஆற அமர குடித்துவிட்டு, சாவகாசமாக அந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.     


இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர், நிகழ்விடத்திற்குச்  சென்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.     இந்த சம்பவத்தில் ஒருவர் அல்லது இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.    ஒரே இரவில் 9 வீடுகளில் திருட முயற்சி நடந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.