Skip to main content

"மூட்டை மூட்டையாய்..." கஞ்சா வேட்டையில் நாமக்கல் போலீஸ் சாதனை..! 

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

dddd

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாராளமாக இறக்குமதியாகிறது. இதைக் கண்காணித்து தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளோ உள்ளுர் அரசியல்வாதிகள் நிர்பந்தத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஆனால், எல்லோரையும் போல் இல்லாமல் அதிரடியாகக் களமிறங்கி துரித நடவடிக்கை எடுக்கும் போலீஸ் அதிகாரிகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வரிசைக்கு உதாரணமாக சினிமா பாணியில் நாமக்கல் போலீஸ் சேசிங் செய்து சுற்றி வளைத்து ஒரே நாளில் 180 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றியுள்ளார்கள்.

 

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இளம் எஸ்.பி சக்தி கணேசன் பொறுப்பேற்று இரண்டு மாதம்தான் ஆகிறது. இங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கு தொடர்ந்து கடிவாளம் போட்டு அடக்கி வருகிறார் சக்தி கணேசன். சென்ற இரண்டு மாதங்களில் 18 கஞ்சா வியாபாரிகள் மாவட்டம் முழுக்க கைது செய்யப்பட்டு, சுமார் 80 இலட்சம் மதிப்புள்ள 800 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

dddd

 

எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்படையினர் கடந்த 17.07.2020-ம் தேதி புவனேஸ்வரி என்பவரிடமிருந்து சுமார் 9½ கிலோ கஞ்சாவும், 19.07.2020-ம் தேதி மாயாண்டி (எ) மாதவன், தமிழரசி இருவரிடமும் சுமார் 10 கிலோ கஞ்சாவும், 20.07.2020-ம் தேதி பேபி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 21.07.2020-ம் தேதி குமரேசன், இளம்பரிதி மற்றும் மஞ்சுளா ஆகியோரிடமிருந்து சுமார் 44 கிலோ கஞ்சாவும், 25.07.2020-ம் தேதி கமலாதேவி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி கோகிலா மற்றும் நதியா ஆகியோரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி அருள்மணி மற்றும் ரேவதி  ஆகியோரிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவும், 25.08.2020-ம் தேதி பழனி மற்றும் ராஜ்குமார் ஆகியோரிடமிருந்து 300 கிலோ கஞ்சாவும், 29.09.2020-ம் தேதி கிருஷ்ணபெருமாள், குமார் மற்றும் பாலையா ஆகியோரிடமிருந்து 210 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

 

அதன் தொடர்ச்சியாகவே 29.09.2020-ம் தேதி எஸ்.பி. சக்தி கணேசனுக்கு வந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் காவலர்கள் தினோ மற்றும் ராம்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். 

 

ஆரோக்கியதாஸ்

                                                              ஆரோக்கியதாஸ்

 

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிப்காட் அருகே 'TN 39 VR 7430' என்ற FORD காரை தனிப்படை போலீசார் துரத்திச் சென்று சுற்றி வளைத்து மறித்தனர். பிறகு சோதனை செய்ததில் அந்தக் காரில் 180 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 18 லட்சம் இருக்கும். அதைக் கைப்பற்றியும், அந்த காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் ஆரோக்கியதாஸ் என்பவரையும் கைது செய்து கைப்பற்றப்பட்ட அந்த கஞ்சாவுடன் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடர் கஞ்சா வேட்டையில் சுமார் ரூபாய் 80 இலட்சம் மதிப்புள்ள சுமார் 800 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Ad

 

இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், IPS நம்மிடம் கூறினார்.

 

இரண்டு மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 800 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது என்றால் தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் கிலோ கஞ்சா இல்லாமல் இருக்காது. இந்த ஒரு மாவட்ட போலீஸ் போல் மற்ற மாவட்ட போலீசும் நடவடிக்கை எடுக்கும் என யாரும் நம்புவதற்கு, வாய்ப்பே இல்லை...!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.