தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,767 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புப்படி ஒரே நாளில் 29 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் காரணமாக, நாமக்கல்லில் கரோனா குணமடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த யமுனா என்ற அந்த பெண் கரோனாவிலிருந்து குணமான சூழலில், அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.