Namakkal MP  house incident What happened Police explain

நாமக்கல் பாராளுமன்ற மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மாதேஸ்வரன் வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டணம் கிராமத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் அவரது தாயார் வசித்து வருகிறார். இன்று (10.04.2025) அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு நீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த மின்விசிறி, சுவிட்ச் மற்றும் ஏசி ஆகியவை சேதமடைந்துள்ளது. இவ்விபத்தில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

Advertisment

இது தொடர்பாகத் தனியார் செய்தி தொலைக்காட்சியில் இன்று மதியம் சுமார் 01:30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகச் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த செய்தியானது பொய்யான புரளியாகும் என நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதுபோல் வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுபவர் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.