Skip to main content

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

  Namakkal government school teacher arrested under pocso act 

 

எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மதிவாணன் (52). இவர், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிவந்தார். இவர் மீது அந்தப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவரும் மாணவிகளின் பெற்றோர் சிலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் புகார் அளித்தனர். 

 

அந்தப் புகார் மனுவில், ஆசிரியர் மதிவாணன் எஸ்.எஸ்.எல்.சி. மாணவிகள் சிலருக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு கொடுத்துவருகிறார் என்று கூறியிருந்தனர். இந்தப் புகார் மனு, உரிய நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மூலமாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (07.12.2021) அதிகாலையில் காவல்துறையினர் பரமத்தி வேலூரில் உள்ள ஆசிரியர் மதிவாணன் வீட்டிற்குச் சென்று, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடந்தது.

 

அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் பள்ளிக்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, ஆசிரியர் மதிவாணன் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, மதிவாணனுடன் பணியாற்றிவந்த ஆசிரியர்கள், அவர் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி டிச. 6ஆம் தேதி இரவு, பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குத் தினமும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். 

 

பாலியல் புகாரில் பட்டதாரி ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.