Skip to main content

திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை கொடூரமாக கொன்று புதைத்த வாலிபர்...

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசையைச் சேர்ந்த ஜோதிடர் கந்தசாமி (50).  இவருடைய மகள் வெள்ளையம்மாள் (21). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. 

திருமணம் ஆன 3 மாதத்திலேயே கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின், பெற்றோர் வீட்டில் வெள்ளையம்மாள் வசித்து வந்தார்.

 

namakkal girl love issue

 

 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், கொசவம்பட்டி அன்னை செட்டியார் நகரைச் சேர்ந்த ஜோதிடர் முத்து (25) என்பவருடன் வெள்ளையம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து முத்து, வெள்ளையம்மாளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அடிக்கடி வெள்ளையம்மாளிடம் பணமும் பறித்து வந்துள்ளார். அவரையே முழுவதுமாக நம்பிய வெள்ளையம்மாள், முத்து பணம் கேட்கும்போதெல்லாம் தனது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, முத்துவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெள்ளையம்மாள் வற்புறுத்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடியாது என முத்து மறுக்கவே, இதுவரை தான் கொடுத்த பணம், நகைகள் எல்லாவற்றையும் உடனடியாக கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

வெள்ளையம்மாள் உயிருடன் இருந்தால்தானே தன்னை தொந்தரவு செய்வார் என்று கருதிய முத்து, அவரை ஒரேயடியாக தீர்த்துக்கட்ட முடிவு செய்து, வெள்ளையம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு, திருச்சி அருகே உள்ள தொடையூருக்குச் சென்று ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதை நம்பி கடந்த 11.1.2020ம் தேதி முத்துவுடன் தொடையூருக்குச் சென்றார் வெள்ளையம்மாள். 

அங்கே, ஒரு கல்லூரி அருகே உள்ள ஆற்றங்கரை ஓரம் நின்று இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். தொடையூர் சென்ற பிறகு, வெள்ளையம்மாளை திருமணம் செய்ய கொஞ்சமும் விருப்பம் இல்லை என்று முத்து கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்தது. ஏற்கனவே அவரை தீர்த்துக் கட்டும் திட்டத்துடன்தான் தொடையூருக்கு வரவழைத்திருந்தார் முத்து. 

அதனால் தான் தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளை கழுத்து அறுத்து படுகொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அத்தோடு நில்லாமல், வெள்ளையம்மாளின் சடலத்தை ஆற்றங்கரையோரமாக குழி தோண்டு புதைத்துவிட்டு ஏதும் அறியாதவர் போல சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் ஜோதிடர் முத்து.

வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மகள், மறுநாள் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த வெள்ளையம்மாளின் தந்தை கந்தசாமி, திருச்செங்கோடு புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வெள்ளையம்மாளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து அவருடைய செல்போன் நம்பரை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

காவல்துறையினரின் பிடி இறுகுவதை அறிந்த முத்து, ஜன. 13ம் தேதி இரவு 9 மணியளவில், திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேலிடம் சரணடைந்தார். வட்டாட்சியர் அவரை, காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில், ''வெள்ளையம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தினார். அதற்கு மறுத்ததால், என்னிடம் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்டார். இல்லாவிட்டால் காவல்துறையில் புகார் செய்து விடுவேன் என்றும் அச்சுறுத்தினார். இதனால் அவரை திட்டமிட்டு கொலை செய்தேன்,'' என்று ஜோதிடர் முத்து வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

அவருடைய வாக்குமூலத்திற்குப் பிறகே வெள்ளையம்மாள் கொன்று புதைக்கப்பட்ட விவரம் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தொடையூர் காவல்துறைக்கு தகவல் அளித்த திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர், சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை ஜோதிடரே கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.