Skip to main content

திரைகடல் ஓடியும் மணமகள் தேடு! ஸ்வீடன் பெண்ணை மணந்த நாமக்கல் பொறியாளர்!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

ஒரு காலத்தில், 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றார்கள். ஆனால், அண்மைக் காலங்களில், தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர், பிழைப்புக்காக வெளிநாடு சென்றாலும், அங்கேயே தனக்கான வருங்கால துணையைத் தேடிக்கொள்வதிலும் தணியாத ஆர்வம் காட்டுகின்றனர். கற்பனைக்கு எப்படி கடிவாளம் போட முடியாதோ, அதுபோல் காதலுக்கு எல்லைகளும் வரையறுக்க முடியாது. அண்மைக் காலங்களாக தமிழக இளைஞர்கள், வெளிநாட்டுப் பெண்களை மணம் முடிப்பதில் காட்டும் ஆர்வமும், நிகழ்வுகளும் அதைத்தான் கூறுகின்றன.

 

Namakkal engineer married Sweden woman

 



இதுபோன்ற இருநாட்டு கூட்டு திருமண ஒப்பந்தங்களுக்கு இரண்டே இரண்டு நுழைவு வாயில்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலமாக ஆண், பெண் துணையைத் தேடிக்கொள்வது; இரண்டாவது, இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடியோ அல்லது படிப்பதற்கோ செல்லும்போது காதல் வயப்பட்டு திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்துவது. ஆனால், எல்லா காதல்களுக்கும் கண்கள்தான் நுழைவாயிலாக இருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுடைய மகன் தரணி. எம்.டெக்., எம்.எஸ்., படித்துவிட்டு ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எம்.எஸ்., பட்டமேற்படிப்புக்காக ஸ்வீடன் சென்றிருந்தார். ஓய்வு நேரங்களில், அங்குள்ள நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் விளையாடச் சென்ற இடத்தில்தான் தரணி, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன் என்பவரைச் சந்தித்தார்.

 

Namakkal engineer married Sweden woman

 



மரினாவை பார்த்த முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் தீ பற்றிக்கொண்டது. ஆனாலும், மரினா சூசேனிடம் தான் காதல் வயப்பட்டது குறித்து அப்போதைக்கு வெளிப்படையாகச் சொல்லவில்லை. அவர் படித்து முடிக்கும் வரை இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர். இந்நிலையில் அங்கேயே ஒரு தனியார் நிறுவனத்தில் தரணிக்கு நல்ல வேலையும் கிடைத்தது. 

நட்பு என்ற கட்டத்தை முறியடிக்க நினைத்த தரணி, ஒருநாள் மரினா சூசேனிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். அவருக்கும் உள்ஓரத்தில் தரணி மீது காதல் இருந்திருக்கும்போல. அவரும் உடனடியாக தரணியின் காதலை ஏற்றுக்கொண்டார். மரினாவின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட, காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர். இதுகுறித்து தரணி, தன் பெற்றோரிடமும் பேசி, ஸ்வீடன் காதலியை மணக்க சம்மதம் பெற்றுவிட்டார். மரினா சூசேன், கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இருதரப்பு பெற்றோரும் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தனர். திருமணத்தை இரண்டு தமிழ் மற்றும் கிறித்தவ சம்பிரதாயங்களின்படி ஒரே நாளில் நடத்திவிட வேண்டும் என்பதுதான் அது. அதற்கு மணமக்கள் இருவருமே ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து தரணி - மரினா சூசேன் ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இதையடுத்து, ஸ்வீடன் பெண்ணுக்கு தமிழ் கலாச்சாரப்படி, திருச்செங்கோட்டில் தரணியுடன் வெள்ளிக்கிழமை (பிப். 8) திருமணம் நடந்தது. பாரம்பரிய முறையில் மணமகன் வெள்ளை நிறத்தில் பட்டு வேட்டி, பட்டு சட்டையும், ஸ்வீடன் நாட்டு பெண் பட்டுச்சேலையும் அணிந்து இருந்தனர். 

தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடந்தாலும், அதைத்தொடர்ந்து கிறித்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது. இதில் மணமகன் உறவினர்கள் மட்டுமின்றி மணப்பெண் தரப்பில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு, அவர்களை அட்சதை தூவி வாழ்த்தினர். மணப்பெண் தரப்பில் வந்திருந்த உறவினர்கள், தமிழ் மரப்புப்படியான திருமண சடங்குகளை பெரிதும் ரசித்ததுடன், வீடியோவிலும் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.