Skip to main content

குழந்தைகள் விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! இதுவரை 8 பேர் கைது!!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 


ராசிபுரம் ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் இதுவரை 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

c


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளரான அமுதா என்கிற அமுதவல்லி (50), சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி, பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு குழந்தையில்லா தம்பதிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளது அண்மையில் தெரிய வந்தது. இதன் பின்னணியில் அமுதாவுடன் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


விசாரணையின் ஒவ்வொரு படிநிலையிலும் இந்த கும்பலைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதோடு, அடுத்தடுத்து புதுப்புது இடைத்தரகர்களும் வரிசையாக கைது செய்யப்பட்டனர். இதுவரை அமுதா, அவருடைய கணவர் ரவிச்சந்திரன் (55), கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த நிஷா என்கிற ஹசீனா (26), பர்வீன் (37), அருள்சாமி (48), பவானியைச் சேர்ந்த செல்வி (29), லீலா (36) ஆகிய எட்டு பேரை கைது செய்துள்ளது காவல்துறை.


இந்த கும்பல் பெரும்பாலும் கொல்லிமலையில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த வறுமையில் உழலும் தம்பதிகளை குறிவைத்து இயங்கி வந்துள்ளது. எந்தெந்த வீட்டில் எல்லாம் புதிதாக குழந்தை பிறந்துள்ளதோ, யார் யாருக்கெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்துக்கொண்டு வளர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனரோ அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்துத் தருவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனின் வேலை. 


இதுகுறித்து விசாரித்து தரவுகளை முழுமையாக கொடுத்தால் முருகேசனுக்கு ஒரு தரவுக்கு 2000 ரூபாயும், குழந்தையை வாங்கிக் கொடுத்தால் மேற்கொண்டு 5 ஆயிரம் ரூபாயும் கமிஷன் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. கொல்லிமலையில் மட்டும் முருகேசன் மூலமாக 10 குழந்தைகளை விலை பேசி வியாபாரத்தை முடித்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் ஆசை வலை வரிக்கும் அமுதா தரப்பு, குழந்தைகளை ஆடு, மாடுகளைப்போல் பேரம் பேசி வாங்கியுள்ளது. கொல்லிமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்குக்கூட குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார் அமுதா.


இவ்வாறு வாங்கப்படும் குழந்தைகளை நிறம், எடை, ஆண், பெண் என தரம் பிரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அமுதா, ஒருபோதும் உள்ளூரில் குழந்தை வணிகத்தில் ஈடுபடுவதில்லை. ஈரோடு, கோவை, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். எல்லாம் முன்ஜாக்கிரதைக்காகத்தான்.


ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளில் குழந்தைகளை விற்பனை செய்யும்போது ஹசீனா, பர்வீன், லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே, ஏற்கனவே பள்ளிபாளையம், திருச்செங்கோடு ஆகிய அரசு மருத்துவமனைகளில் அமுதா பணியாற்றியபோது அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். 


இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 13 குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதையும், இதில் நான்கு குழந்தைகள் யார் யாருக்கு  விற்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விற்கப்பட்டது எல்லாமே பெண் குழந்தைகள்தான் என்கிறார்கள். பெரும்பாலும் இந்த கும்பல்,  யாரிடம் குழந்தை பெறப்பட்டது என்பதையும், யாரிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது என்பதையும் மிக ரகசியமாக வைத்திருந்துள்ளனர். அதனால் குழந்தையை  விலைக்குக் கொடுத்த தம்பதிகள் யாருக்கும், தங்கள் குழந்தை இன்னாரிடம்தான் வளர்கிறது என்பது தெரியவில்லை.


இது ஒருபுறம் இருக்க, கடந்த 2014ம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த வடிவேல்&அமுதா தம்பதிக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை இலங்கையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ புகார் அளித்தார். ஆனால், இரண்டு தம்பதிகளுமே ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதும், பரஸ்பர சம்மதத்தின் பேரிலேயே பெண் குழந்தையை இலங்கை தம்பதியிடம் ஒப்படைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் ராசிபுரம் அமுதாவுக்கு தொடர்பில்லை என்று நாமக்கல் எஸ்பி அருளரசு கூறினார். இலங்கை தம்பதி வசம் ஒப்படைத்த குழந்தைக்கு தாராபுரத்தில் பிறப்புச்சான்றிதழ் பெறப்பட்டதாக சொல்லப்படுவதிலும் ராசிபுரம் அமுதாவுக்கு தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் பிறந்த 50 குழந்தைகள் திடீர் திடீரென்று மாயமாகி இருப்பதையும் இந்த விவகாரத்துடன் உள்ளூர் மக்கள் சிலர் முடிச்சுப்போட்டு பேசுகின்றனர். ஆனால் அந்தக் குழந்தைகள் இறந்துவிட்டனவா? உயிருடன் இருக்கின்றனவா? என்பதும் அவர்களுக்கே புரியாத புதிராக இருந்து வருகிறது. அதனால் அந்தக் குழந்தைகளும் இவ்வாறு சட்ட விரோதமாக கைமாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. 


இந்த விவகாரத்தைத் தோண்ட தோண்ட பல பூதாகரமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை நாமக்கல் மாவட்ட போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக காவல்துறை. ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த அமுதாவின் கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த முருகேசன் ஆகிய இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் ரவுடி குண்டாசில் கைது!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 


சேலத்தில் தொடர்ந்து வழிப்பறி, அடிதடி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

m


சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மண்டை விஜய் என்கிற விஜயகுமார் (26). கடந்த ஏப்ரல் 26ல், கொண்டப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, பூபாலன் என்பவரிடம் கத்தி முனையில் அரை பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் மண்டை விஜயை கைது செய்தனர். இவர் தனது கூட்டாளிகள் பரமா என்கிற பரசுராமன், வசந்த் என்கிற வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து 26.12.2018ல் கன்னங்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ஒரு வழக்கும், 29.1.22018ல் ஒருவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


இவ்வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்ற அவர் வெளியே வந்த பின்னர் மீண்டும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். 


இதையடுத்து மண்டை விஜயையை குண்டர் சட்டத்தில் அடைக்க கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர், மாநகர துணை ஆணையர் ஷியாமளாதேவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்படி, மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் மண்டை விஜயை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விஜயிடம் குண்டர் சட்ட கைது ஆணை சார்வு செய்யப்பட்டது. 


 

Next Story

நாமக்கல்லில் எல்லாமே ஸ்டிரிக்ட்தான்! சொல்கிறார் கலெக்டர் ஆசியா மரியம்!!

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 


நாமக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் எல்லாமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது:

 

a


குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. 


இதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம். 


குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம். இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்.