Skip to main content

வேலை கிடைக்காத விரக்தியில் அத்தையை வெட்டிக்கொன்ற ஆசிரிய பட்டதாரி! மேலும் இருவரையும் வெட்டினார்!!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

 

namakkal district puduchathiram incident police


நாமக்கல் அருகே, முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த வாலிபர், அத்தையை கொடுவாளால் வெட்டிக் கொன்றார். பக்கத்து வீட்டில் இருந்த பெரியப்பா, உள்ளூர்க்காரர் ஒருவரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாலப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அஞ்சலை. கூலித்தொழிலாளி. இவர்களுடைய மகன் கோடீஸ்வரன் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கோடீஸ்வரன், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுடன் எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக முயற்சித்தும் வேலை கிடைக்காததால், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தார். இதற்கிடையே, நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் அரசு வேலை பெற்றுத்தருவதாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியதை நம்பி, அவரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

 

கோடீஸ்வரனும், பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லித்தான் மேற்சொன்ன தொகையை வசூலித்துள்ளார். இவரிடம் பணத்தை பெற்றுச்சென்ற நபர், சொன்னபடி அரசு வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், கோடீஸ்வரனிடம் பணம் கொடுத்த நபர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடீஸ்வரன், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கோடீஸ்வரன் வீட்டுக்குச்சென்று, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி கூறினர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோடீஸ்வரன், காவலர்களை தாக்க முயற்சித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தது. பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், தொடர்ந்து யாரிடமும் பேசாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (ஆக. 7) வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரன், பக்கத்து வீட்டில் வசித்து வந்த அத்தை லட்சுமியை (65) கொடுவாளால் திடீரென்று சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 

அருகில் இருந்த தனது பெரியப்பா பெரியண்ணன் (70), வீட்டிற்குள் நுழைந்த அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெரியப்பாவையும் வெட்டியுள்ளார். அப்போதும் ஆத்திரம் தணியாத கோடீஸ்வரன், வீட்டை விட்டு வெளியே வந்தார். உள்ளூரைச் சேர்ந்த நரேஷ்குமார் (30) என்பவர் அந்த வழியாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அவரையும் கொடுவாளால் வெட்டினார். அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன்பிறகு எதுவுமே நடக்காததுபோல், தன் வீட்டுக்குள் சென்று உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டார் கோடீஸ்வரன்.

 

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெரியண்ணன், நரேஷ்குமார் ஆகிய இருவரையும் மீட்ட ஊர்க்காரர்கள், அவர்களை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த புதுச்சத்திரம் காவல்துறையினர், லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதையடுத்து, வீட்டுக்குள் பதுங்கி இருந்த கோடீஸ்வரனை கைது செய்தனர். கதவை தட்டியும் அவர் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோடீஸ்வரனின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த பிறகே, அவரை கைது செய்தனர். காவல்துறையினர் வீட்டுக்குள் ஒரு மூலையில் இருட்டுக்குள் உட்கார்ந்து இருந்துள்ளார்.

 

கைதான கோடீஸ்வரன் காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''அரசாங்க வேலை வாங்கிக் தருவதாக பலரிடம் பணம் வசூலித்தேன். அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்த ஒருவர் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதால் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் கேட்டபோதும், தரமுடியாது என்று சொல்லி விட்டார். இதை அறிந்த அத்தை, எனக்கு அடிக்கடி புத்திமதி சொல்லிக்கொண்டே இருந்தார்.

 

விரக்தியில் இருந்த எனக்கு அவர் அட்வைஸ் செய்தது பிடிக்காததால் அவரை வெட்டிக்கொன்றேன். பக்கத்தில் இருந்ததால் பெரியப்பாவையும், என்னை பிடிக்க வந்தார் என நினைத்து நரேஷ்குமாரையும் வெட்டினேன்,'' என்று கூறியுள்ளார். விசாரணையின்போது கோடீஸ்வரன் பலமுறை புத்தி பேதலித்தது போல் முன்னுக்குப் பின் முரணாகவும், சம்பந்தம் இல்லாமல் பேசியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

 

இந்த சம்பவம் புதுச்சத்திரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.