Skip to main content

26 தனிப்பிரிவு காவலர்கள் ஒரே நாளில் கூண்டோடு டிரான்ஸ்பர்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

 

namakkal district police sp order

நாமக்கல் மாவட்டக் காவல்துறை தனிப்பிரிவில் பணியாற்றி வரும் 26 தலைமைக் காவலர்களை எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் ஒரே நாளில் கூண்டோடு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு மாவட்டக் காவல்துறையிலும் எஸ்.பி.யின் நேரடி பார்வையின் கீழ் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் தலைமையிடத்தில் தனி காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

மாவட்டம் முழுவதும் அன்றாடம் நடக்கும், நடக்கப்போகும் நிகழ்வுகள் மட்டுமின்றி சில நேரங்களில் மோதல்கள், கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்தும் முன்கூட்டியே தகவலறிந்து மாவட்ட எஸ்.பி.க்கு அளிக்கும் பணிகளைச் செய்து வருவது இப்பிரிவின் முதன்மைப் பணியாகும்.

 

மாவட்ட தலைமை இடத்தில் உள்ள தனிப்பிரிவுக்கு உதவியாக ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் தனியாக தலைமைக் காவலர் அல்லது சிறப்பு எஸ்.ஐ.யும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்தந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்த நிகழ்வுகள், குற்றச்சம்பவங்கள் மட்டுமின்றி, நடக்கப்போகும் நிகழ்வுகளையும் ஒற்றறிந்து தலைமையிட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், தேவைப்பட்டால் நேரடியாக எஸ்பிக்கும் தகவல் அளிக்க வேண்டியது தனிப்பிரிவு காவல்நிலைய தலைமைக் காவலர்களின் பணியாகும்.

 

காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு காவலர்களை பெரும்பாலும் பணியிட மாற்றம் செய்வதில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், பொறுப்புக்கு வந்த நாள்முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் ஜூலை 2- ஆம் தேதி, தனிப்பிரிவு காவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாலை 04.00 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், இரவு 10.00 மணிக்கு முடிந்தது. 

 

ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் நடந்த கடந்த கால சம்பவங்கள், சாதிய மோதல்கள், குற்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். ஆய்வுக்கூட்டம் முடிந்து கிளம்பும்போது திடீரென்று, மாவட்டத்தில் உள்ள 26 காவல்நிலையங்களிலும் பணியாற்றி வரும் தனிப்பிரிவு தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்கள் 26 பேரையும் வெவ்வேறு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

எஸ்.பி.யிடம் இருந்து இப்படியொரு உத்தரவு வரும் என்று ஒருவரும் எதிர்பார்க்காததால், இடமாற்ற உத்தரவைக் கேட்டதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே இடத்தில் பல ஆண்டாக பணியாற்றியவர்கள் மட்டுமின்றி 5 மாதம் மட்டுமே பணியாற்றியவர்களும் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளனர். 

 

இடமாற்றம் செய்யப்பட்ட புதிய காவல்நிலையங்களில் அனைவரும் ஜூலை 5- ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.