namakkal police sp

காவல் துறையில் பணிபுரிகிற மாவட்ட கண்காணிப்பாளர்களில் பலர் அந்தந்த மாவட்ட மக்களுக்காக தன்னெழுச்சியாக உழைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் பணியாற்றுபவர் தான் எஸ்.பி. சக்தி கணேசன். இவர் கடந்த இரண்டு வருடமாக ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றினார். தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் சக்தி கணேசன் நாமக்கல் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில் அங்கு சென்ற பிறகும் சாதாரணப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இவர் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் செய்த பணியை மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் ஈரோட்டில் செய்தது ஒன்று வயதானவர்களுக்கு ஒரு திட்டம். அதன் பெயர் ஹலோ சீனியர்ஸ். இரண்டாவது பெண்களுக்கான திட்டம். லேடிஸ் பஸ்ட். இந்த இரண்டும் இன்று நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கியுள்ளார்.

Advertisment

வயதானவர்கள் தனது குடும்ப உறுப்பினர்கள் தங்களை கவனிக்க முடியாது என்று மறுதலித்து ஒதுக்கப்பட்டபோது அவர்கள் காவல் நிலையத்தில் நேரடியாக வந்து புகார் தராமல் தொலைபேசி வழியாக புகார் கூறினால் போதும். சம்பந்தப்பட்ட காவலர்கள் நேரில் சென்று அவர்களுக்கான தீர்வை செய்து வருவார்கள். அதேபோல்தான் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் அவர்கள் நேரில் வந்து புகார் தராமல் இந்த லேடிஸ் பஸ்ட் என்கிற திட்டத்தில் கொடுக்கப்படுகிற எண்ணில் புகார் தந்தால் சம்பந்தப்பட்ட மகளிர் போலீசார் நேரில் சென்று தீர விசாரித்து அவர்களுக்கு உதவுவார்கள்.

ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் ஹலோ திட்டத்தில் சுமார் மூவாயிம் பேர் இதில் பயனுற்றார்கள். அதேபோல் லேடிஸ் பஸ்ட் திட்டத்தில் 5000 பெண்கள் தொலைபேசி அழைப்புகள் மூலமாக புகார் கூறினார்கள். அவர்களுக்கு தீர்வு காவல்துறை கொடுத்துள்ளது. ஆக இது ஒரு முன்னோடியான திட்டம். இந்த திட்டத்தை நாமக்கல் மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன் தொடக்கமாக அந்த தொலைபேசி எண்ணை கொடுத்து மகளிர் போலீசார் மற்றும் காவல் துறையினரை அழைத்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளார். ஈரோட்டில் மட்டுமல்ல,நாமக்கல்லிலும் இளம் எஸ்.பி.யான தம்பி சக்தி கலக்கி வருகிறார் என்கிறார்கள் காவல்துறை வட்டாரம்.