பரமத்தி வேலூர் அருகே, ஆண் நண்பருடன் இருப்பதற்கு இடையூறாக இருந்த மகனை, பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வால்நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு வெள்ளையன் என்கிற தங்கராசு (22) என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்து விட்டதை அடுத்து, தாயும் மகனும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சுப்ரமணியுடன் கவிதாவுக்கு தவறான தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர். தங்கராசுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அடிக்கடி கவிதாவிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துவந்துள்ளார்.
கடந்த 5ஆம் தேதி, தங்கராசு மது குடிப்பதற்காக கவிதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், வீட்டில் இருந்து தங்கராசு வெளியே கிளம்பிவிட்டார்.
இந்நிலையில், ஜன.6-ல் வாய்நாயக்கன்பாளையத்தில் உள்ள சரஸ்வதி நகர்ப் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் தங்கராசு சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து நல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கவிதா தொடர்பு வைத்திருந்த சுப்ரமணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மனைவி, குழந்தைகள் கோவையில் வசிக்கின்றனர். அவர்களுடன் சுப்ரமணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் அவர், அடிக்கடி வீட்டுக்குவந்து செல்வதற்கு கவிதாவின் மகன் தங்கராசு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது.
சம்பவத்தன்று, தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு தங்கராசு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு சென்ற சுப்ரமணியத்திடமும் தங்கராசு தகராறு செய்துள்ளார். இது கைகலப்பாக மாறியது. தங்கராசு தங்களது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதாகக் கருதிய கவிதாவும், சுப்ரமணியும் சேர்ந்து தங்கராசுவை கொலை செய்துள்ளனர். அவர்கள்தான் சடலத்தை சரஸ்வதி நகரில் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்துள்ளது.
தலைமறைவான ஜோடிகளை பிடிக்க வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கந்தம்பாளையம் எஸ்.ஐ. முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.