Skip to main content

கொல்லிமலை: மனைவி 'ஒத்துழைக்க' மறுப்பு; 2 குழந்தைகளை 200 அடி பள்ளத்தில் வீசி கொன்ற கொடூர தந்தை!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

கொல்லிமலை அருகே, மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது இரு குழந்தைகளையும் 200 அடி பள்ளத்தில் வீசிக்கொன்ற கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.  


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு அரசம்பட்டியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (28). விவசாயி. இவருடைய மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு இரு குழந்தைகள். மகன், கிரிராஜ் (8); மகள் கவிதர்ஷினி (5). 


சிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் முன்பு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் பாக்கியம் கோபித்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார். என்றாலும், கடந்த 7ம் தேதியன்று, குழந்தைகளை மட்டும் கணவர் சிரஞ்சீவி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். இந்நிலையில், புதன்கிழமை (நவ. 13, 2019) அன்று பாக்கியம், உறவினர்களிடம் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, சிரஞ்சீவியுடன் குழந்தைகள் இல்லை என தெரிய வந்தது.  


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரித்ததில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீக்குப்பாறை காட்சி முனை (வியூ பாயிண்ட்) பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசியெறிந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிரஞ்சீவியை காவல்துறையினர் கைது செய்தனர்.


காவல்துறையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:


எனக்கு சரிவர காது கேட்காது. எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். மது குடிக்கும் பழக்கமும் உண்டு. இதனால் எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார். 


அவரை திரும்பவும் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, குழந்தைகளை அழைத்து வந்து உறவினர்கள் வீடுகளில் மறைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் காணாமல் போய்விட்டதாக மனைவியிடம் மிரட்டி வரவைப்பேன். கடந்த சில மாதங்களாகவே பாக்கியம் என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

namakkal district kollimalai hills father childrens police investigation


இதனால் எங்களுக்குள் மேலும் தகராறு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாள் முன்னதாக ஏற்பட்ட தகராறின்போதும் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் கடந்த 7ம் தேதியன்று, மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்து இரு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். 


எப்படியும் குழந்தைகளைப் பார்க்க என் மனைவி வந்து விடுவார் என்று நினைத்து இருந்தேன். சொந்தக்காரர்களிடமும் சொல்லி அனுப்பினேன். ஆனால் பாக்கியம் வீட்டுக்கு வராததால், குழந்தைகளைக் கொல்ல திட்டம் போட்டேன். அதன்படி சீக்குப்பாறை காட்சி முனை பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று, அங்கிருந்து 200 அடி பள்ளத்தில் குழந்தைகளை தூக்கி வீசி எறிந்தேன். 


இவ்வாறு வாக்குமூலத்தில் சீரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், விசாரணையின்போது அடிக்கடி சிரஞ்சீவி முன்னுக்குப்பின் முரணாக பேசியதோடு, சில நேரங்களில் மூர்க்கத்தனமாகவும் பதில் அளித்ததாகவும் கூறினர். இந்த சம்பவம் கொல்லிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.