Skip to main content

பெண் கொலை; நான்கு மாதங்களாகத் தொடரும் அசம்பாவிதங்கள்! 

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Namakkal district Jodarpalayam issue Destruction of 1000 palm trees

 

ஜேடர்பாளையம் அருகே, மர்ம நபர்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. விவசாயிகளின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் 1000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்ததோடு, பம்ப் செட்டுகளையும் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மனைவி சத்யா (28 பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.காம்., பட்டதாரி. இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி, அதே பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றார். அன்று மாலை அவர் மேய்ச்சல் நிலம் அருகே உள்ள ஓடைப் பகுதியில் சேற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆரம்பத்தில் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 

 

உடற்கூராய்வில் சத்யாவின் உடலில் 38 இடங்களில் முள் கீறலால் ஏற்பட்டதுபோன்ற காயங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. சத்யா கொலை வழக்கு தொடர்பாக, உள்ளூரில் வெல்லம் காய்ச்சும் ஆலைக்கொட்டாய் நடத்தி வரும் சதாசிவம் என்பவரிடம் வேலை செய்து வரும் நீலகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். 

 

ஆனால் பிடிபட்ட சிறுவன், பொய்யான குற்றவாளி என்றும், சத்யா கொலையின் பின்னணியில் சதாசிவத்தின் ஆலையில் வேலை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளிகள் மீது சந்தேகம் இருப்பதாகவும் சத்யாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். 

 

சம்பவம் நடந்த பகுதியில் கொலையுண்ட சத்யாவின் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதேநேரம், கரும்பாலை நடத்தி வருவோர் அனைவரும் வேறு ஒரு சமூகத்தினர் என்பதோடு, அவர்கள்தான் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து ஆதரவு தருவதாகவும், அவர்களால்தான் சத்யா கொல்லப்பட்டார் என்றும் தகவல் பரவியது. 

 

இதையடுத்து ஜேடர்பாளையம் அடுத்த சம்பந்தப்பட்ட பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. இந்நிலையில்தான் சதாசிவம், கொத்துக்காரர் என்கிற சக்திவேல் ஆகியோர் வீடுகளில் மர்ம நபர்கள் கடந்த மார்ச் 15ம் தேதி தீ வைத்தனர். ஏப்ரல் 14ம் தேதி குழந்தைவேல், பூங்கோதை ஆகியோர் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 

 

இதையடுத்து ஏப்ரல் 27ம் தேதி மீண்டும் குழந்தைவேலின் தோட்டத்திற்கு புகுந்த மர்ம நபர்கள் அவருக்குச் சொந்தமான பவர் டில்லர், நீர்ப்பாசன உபகரணங்களுக்கு தீ வைத்தனர். இதில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின. இந்த பரபரப்புக்கு இடையே மே 13ம் தேதி நள்ளிரவு எம்.ஜி.ஆர். என்கிற முத்துசாமியின் ஆலைக்கொட்டாயில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வடமாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். ராகேஷ் (19) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

இதையடுத்து அங்கு மேலும் பதற்றம் உருவானதை அடுத்து, மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ஆகியோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். ஊரைச் சுற்றிலும் 17 இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. என்னதான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதும், மர்ம நபர்களின் அட்டகாசம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. 

 

மே மாதம் 17ம் தேதி நள்ளிரவில், வீ.கரப்பாளையம் - ஜேடர்பாளையம் சாலையில் ஆலைக்கொட்டாய் உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோப்புக்குள் நுழைந்துள்ளனர். அந்த தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், சில பாக்கு மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக இதுபோன்ற மர்ம சம்பவங்கள் நடக்காமல் இருந்தன. 

 

இந்நிலையில் ஜூன் 24ம் தேதி பொத்தனூரைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவருக்கு சின்னமருதூரில் உள்ள 1.5 ஏக்கர் பாக்குத் தோப்பில் நுழைந்த மர்ம நபர்கள், 1500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அழித்தனர். அதே பகுதியில் உள்ள தங்கமுத்து, சுப்ரமணி, இளங்கோவன், ராமலிங்கம், சாமியப்பன், செந்தில் ஆகியோரின் தோட்டத்தில் உள்ள பம்ப் செட்டுகளையும் அந்த கும்பல் நாசப்படுத்தியது. 

 

இதன்பிறகு, மீண்டும் ஐ.ஜி. சுதாகர் அந்த ஊருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை 8ம் தேதி நள்ளிரவு மீண்டும் சவுந்தரராஜன் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 1000க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களையும் வெட்டி சாய்த்தனர். 

 

Namakkal district Jodarpalayam issue Destruction of 1000 palm trees

 

மேலும், பெரிய மருதூர் பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் 20 சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளையும் வேரோடு பிடுங்கி வீசி எறிந்துள்ளனர். அப்பகுதியில் மேலும் சிலரின் தோட்டத்திற்குள்ளும் புகுந்த மர்ம கும்பல் பம்ப் செட்டுகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். 

 

இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறை பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை எஸ்.பி. ராஜேஷ்கண்ணா, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. ராஜமுரளி, சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். 

 

மர்ம நபர்களின் தொடரும் அட்டகாசத்தால் ஜேடர்பாளையம், வீ.கரப்பாளையம், வடகரையாத்தூர், பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட கிராம மக்களிடையே அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.